Last Updated : 08 Mar, 2018 07:03 PM

 

Published : 08 Mar 2018 07:03 PM
Last Updated : 08 Mar 2018 07:03 PM

மார்ச் 16ஆம் தேதி முதல் திரையரங்குகளை மூட முடிவு : தமிழக அரசுக்கு நெருக்கடி

கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், வரும் 16ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த 1ஆம் தேதி முதல் எந்த புதுப்படத்தையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 4 தென்னிந்திய மொழிகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள். இதனால், ஏற்கெனவே ரிலீஸ் செய்த படங்களையே மறுபடியும் ஓட்டி வருகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். இதனால், தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் நஷ்டம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை 3 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் நடைபெற்றது. 180க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்; பெரிய திரையரங்குகளில் இருக்கைகளைக் குறைக்க அனுமதி தரவேண்டும்; 3 வருடங்களுக்கு ஒருமுறை லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அடிப்படையில், ஒருவார காலத்திற்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்படி ஆணை பிறப்பிக்கவில்லை என்றால், மார்ச் 16ஆம் தேதி முதல் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை திரையரங்களை மூடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x