வில்லனாக நடிக்கும் வெங்கட்பிரபு

வில்லனாக நடிக்கும் வெங்கட்பிரபு
Updated on
1 min read

வைபவ் ஹீரோவாக நடிக்கும் படத்தில், வில்லனாக வெங்கட்பிரபு நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ தொடங்கி ‘சென்னை 28’ உள்ளிட்ட  பல படங்களில் குணச்சித்திரம், கதாநாயகன் என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நிதின் சத்யா. கடந்த ஆண்டு ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.

தற்போது தனது ‘ஷ்வேத் நிதின் சத்யா’ பட நிறுவனம் சார்பில் இரண்டாவது தயாரிப்பைத் தொடங்கிவிட்டார். ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ், இந்தப் படத்தின் மூலம் இயக்குராக அறிமுகமாகிறார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தில், வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார். காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் வைபவ் நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை பிரபலம் வாணி போஜன் நடிக்கிறார்.

இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கவுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு, அரோல் கரோலி இசையமைக்கிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் ‘மங்காத்தா’ அஜித் கதாபாத்திரம் போல் வில்லன் போலீஸாக நடிக்கிறார். சமீபத்தில் ஆன்லைனில் வெளியான ‘களவு’ படத்திலும் வெங்கட்பிரபு போலீஸாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in