Last Updated : 14 Feb, 2019 09:38 AM

 

Published : 14 Feb 2019 09:38 AM
Last Updated : 14 Feb 2019 09:38 AM

அப்பா எனக்கு அட்வைஸ் செய்ததே இல்லை!- ‘தேவ்’ கார்த்தி நேர்காணல்

‘‘கதைகளைத் தேர்வு செய்வதில் என்னு டைய கணிப்புகளும், முடிவுகளும் சில நேரங்களில் தவறாக அமைந் திருக்கு. அந்த அனுபவத்துக்குப் பிறகு, இப்போதெல்லாம் என்னிடம் கதை சொல்ல வருகிறவரின் முந்தைய படங்களின் ஸ்டைலை முக்கியமானதாக பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அவர்கள் கொண்டு வரும் கதைகளின் தன்மையையும் கூர்ந்து கவனிக்கிறேன். இதைத் தொடர்ந்து நான் தேர்ந்தெடுத்தக் கதையில் இயக்குநரும் நானும் புரிதலோடு பயணிக்க ஆரம்பிப்போம். இதுதான் என்னுடைய சமீபத்திய படங்கள் எல்லாம் வித்தியாசமான களங்களாக அமைய காரணமாகும்’’ என்கிறார் கார்த்தி.

‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து தற்போது ‘தேவ்’ படம் ரிலீஸாகப் போகிறது. அடுத்தடுத்து ‘மாநகரம்’ இயக் குநர் லோகேஷ், பாண்டிராஜ், ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் என வரிசையாக டிக் அடித்துக்கொண்டு படப்பிடிப்புகளுக்குப் பறந்துகொண்டிருக்கிற கார்த்தியுடன் தொடர்ந்து உரையாடியதில் இருந்து..

‘தேவ்’ படத்தின் மேக்கிங் ஸ்டைல், டிரெயிலர் போன்றவற்றைப் பார்க்கும்போது ‘பையா’ பாணியில் ஒரு படம் மாதிரி தெரிகிறதே?

‘பையா’ படத்துக்குப் பிறகு அதே மாதிரி மனநிலையில் ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு தொடர்ந்து அதே மாதிரி போலீஸ் கதைகளாக வந்த நேரத்தில்தான் இந்த மாதிரி ஒரு கதையைக் கேட்க நேர்ந்தது. ‘பையா’ மாதிரி இரண்டு கேரக்டர்களோட பயணமாகத்தான் இதுவும் இருக்கும். ஆனால் எனக்கும், நாயகி ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பின் கதைகள் இருக்கும். நான் அப்பாவிடம் வளர்ந்த பையனாகவும் ரகுல் அம்மா வளர்த்த பொண்ணாகவும் ஒரு பெரிய வாழ்க்கைக் கதையிருக்கும். பாடல் காட்சி மாதிரியே இதில் ஒவ்வொரு 20 நிமிஷத்துக்கும் லொகேஷன் மாறிக் கொண்டே இருக்கும். அந்தப் புதுமைதான் இந்தக் கதையை நான் டிக் அடிக்க முக்கிய காரணம்.

படத்தில் நீங்கள் அப்பா வளர்த்த பைய னாக வருகிறீர்கள் என்றால், உண்மையில் உங்கள் அப்பா சிவகுமாருக்கும் உங்களுக்கு மான நடைமுறை அனுபவங்கள் இதில் வெளிப்படுமா?

அப்பா எனக்கு அறிவுரைகள் செய்ததே இல்லை. அவருடைய அனுபவங்களை மட்டுமே எங்களுடன் பகிர்ந்துகொள்வார். அவ்வளவுதான். நான் 10-ம் வகுப்பு படிக்கும் காலகட்டத்தில்தான் அவர்கூட எனது நேரத்தை செலவழிக்க முடிந்தது. அந்த நேரத்தில்தான் சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு டிவி பக்கம் அப்பா வந்தார். எங்கள் வீட்டில் நானும், என் தங்கையும்தான் அப்பாவிடம் பயமே இல்லாமல் ரொம்பவும் ஜாலியாக, என்ன வேண்டுமானாலும் பேசும் சூழலில் இருந்தோம். வீட்டுக்குள் அந்த சுதந்திரம் ஒரு மகனுக்கோ, மகளுக்கோ ரொம்பவும் முக்கியம். அப்படி ஓரிடத்தை அப்பா எங்களுக்குக் கொடுத்திருந்தார். இந்தப் படத்தின் கதைக் களத்தில் ஹீரோ, அப்பா வளர்த்த பையன் என்பதில் இயக்குநரோட சொந்த வாழ்க்கை அனுபவங்களும் சில முக்கிய அங்கமாக இருக்கும்.

சமீபத்தில் நடந்த ‘தேவ்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர், வசனகர்த்தா இருவரது தனித்தனி உழைப்பு பற்றி ஏதோ பேச வந்தீர்களே?

ஆந்திரா, கேரளாவில் எல்லாம் கதை விவாதம், கதை எழுத்தாக்கம் உள்ளிட்ட விஷயங்களுக்காகவே ஒரு தனி பிரிவு வைத்திருக்கிறார்கள். அதற்காக இரண்டு மாதங்களை செலவு செய்கிறார்கள். தமிழில் தான் கதை எழுதுபவரே அல்லது வசனம் எழுதுபவரே தனக்கு இன்னும் பெரிய வெளிச்சம் வேண்டும் என்று படத்தை இயக்கு வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் தானே கையில் எடுத்துக்கொள்கிறார். அந்த விஷயம் முதல் படம் என்றால் ஓகே. இதையே தொடர்ந்து செய்ய வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். சமீபத்தில் சில அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்ல வந்தார்கள்.

அதை எல்லாம் கேட்டதும், ‘இதை நீங்கள் உங்க ளுடைய இரண்டாவது, மூன்றாவது படங் களுக்கான கதையாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை யெனில் என்னிடம் இந்தக் கதையைக் கொடுங்கள். நான் ஒரு தொகை கொடுக் கிறேன் என்று சொல்லி, தொகை கொடுத்து அந்தக் கதையை வாங்கி வைத்திருக்கிறேன்.

அந்தத் தொகை அவர்களுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு பயன்படும். அப்படியில்லை என்றாலும் அவர்கள் தொடர்ந்து இது போன்ற கதை ஆக்கத்தில் கவனம் செலுத் தத் தூண்டுகோலாக இருக்கும். இந்த மாதிரியான நடைமுறை பரவலாக வேண்டும் என்பது எனது விருப்பம். அதைத்தான் அங்கே குறிப்பிட்டுச் சொல்ல வந்தேன். ஆனால், அந்த நிகழ்ச்சியில் இதைப் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x