Published : 02 Oct 2018 03:56 PM
Last Updated : 02 Oct 2018 03:56 PM
கடந்த வாரம் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச்சிவந்த வானம்’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய படங்கள் வெளியாகின. இதில்‘செக்கச்சிவந்த வானம்’ வெளியான நாளிலிருந்தே வரவேற்பைப் பெற்று, வசூலைக் குவித்து வருகிறது. ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து, தற்போது தான் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வசூல் கூடியுள்ளது.
இந்நிலையில், இந்த வாரம் '96', 'நோட்டா', ‘ராட்சசன்’ ஆகிய 3 படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கின்றன. மூன்றுமே எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய படங்கள் என்பதால், எப்படி திரையரங்குகள் ஒதுக்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
'96' படத்தின் நேற்று (அக்.1) பத்திரிகையாளர் காட்சி நடைபெற்றது. இதில் அனைவருமே பாராட்டு தெரிவிக்க, சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு. மேலும், பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இளைஞர்கள் மத்தியில் இப்படத்துக்குத் தான் முதல் முன்னுரிமை அளிப்பார்கள் எனத் தெரிகிறது.
‘நோட்டா’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வெளியிடுவதால், அவர்களோ அதிகமான திரையரங்குகள் திரையிட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார்கள். ‘ராட்சசன்’ படத்தை ட்ரைடண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட அனைத்து படங்களுமே வெற்றி என்பதால், அதற்கும் திரையரங்குகள் அளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
மூன்றில் எந்தவொரு படமுமே பின்வாங்காததால், ‘செக்கச்சிவந்த வானம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘96’, ‘நோட்டா’, ‘ராட்சசன்’ ஆகிய 5 படங்களுக்குமே காட்சிகள் ஒதுக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT