Last Updated : 25 Aug, 2018 06:09 PM

 

Published : 25 Aug 2018 06:09 PM
Last Updated : 25 Aug 2018 06:09 PM

முதல் பார்வை: எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்

பணக்கார வீட்டுப் பெண்ணைக் கடத்தும் இரு இளைஞர்களின் நிலை, அதை துப்பறியும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் கதையே ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.

தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்றுவிட்டு 19 வயதில் சிறைக்குச் செல்கிறார் டேவிட் (கிஷோர்). இதனால் அவரின் அக்கா மகன் தாமஸ் (விவேக் ராஜகோபால்) ஆதரவற்றவராகி கஷ்டப்படுகிறார். தண்டனை முடிந்து விடுதலையாகும் டேவிட், தன் அக்கா மகனைச் சந்திக்கிறார். இருவரும் திட்டமிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் மகள் ஸ்வேதாவைக் (வரலட்சுமி சரத்குமார்) கடத்துகின்றனர். இதனைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் வேலையைச் செய்கிறார் (நட்ராஜ்) ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சத்யராஜ். ஸ்வேதாவின் தந்தை (ஜெயக்குமார்) கடத்தல்காரர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்கச் சம்மதிக்கிறார். உண்மையில் வரலட்சுமியை ஏன் கடத்துகிறார்கள், சத்யராஜ் ஏன் துப்பறிகிறார், கடத்தப்பட்ட பெண்ணை ஒப்படைக்க பேசப்படும் டீல் என்ன, வரலட்சுமியால் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் பறக்க வேண்டிய திரைக்கதையில் நடக்கவும் வைக்காமல் நகர வைத்திருக்கிறார் இயக்குநர் சர்ஜுன். க்ரைம் த்ரில்லருக்குரிய கதைக்களத்தில் புகுந்து விளையாட வேண்டியவர் வேடிக்கை பார்த்திருக்கிறார்.

கிஷோரும், சத்யராஜும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். யதார்த்தமான நடிப்பில் சத்யராஜ் மின்னுகிறார். கிஷோர் ஒட்டுமொத்த உழைப்பையும் நடிப்பில் காட்டி நிமிர வைக்கிறார். விவேக் ராஜகோபால் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

வரலட்சுமிக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. மகள் கடத்தப்பட்ட பிறகும் ஜெயக்குமார் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அவரின் நடிப்பில் போதாமை வெளிப்படுகிறது. யோகி பாபு இருந்தும் படத்தில் சுவாரஸ்யம் இல்லை.

சுதர்சன் சீனிவாசன் சென்னை மாநகரத்தையும், பாழடைந்த தேவாலயத்தையும் படம் பிடித்திருக்கும் விதம் ரசனை. சுந்தரமூர்த்தியின் இசையில் தேவையில்லாத பாடல்கள் துருத்தி நின்று வேகத்தடையை ஏற்படுத்துகின்றன.

இயக்குநர் சர்ஜுன் சரியான இடங்களில் திருப்பங்களைப் பயன்படுத்தி இருக்கிறார். அது சரியாக எடுபடுகிறது. ஆனால், விசாரணை மிகவும் மந்தகதியில் செல்வதும், எந்தப் பரபரப்பும் இல்லாமல் மெதுவாகக் காட்சிகள் நகர்வதும் படத்துக்குப் பாதகமாக அமைந்துவிடுகிறது. பணம்தான் பிரதானம், எல்லா பிரச்சினைகளுக்கும் அதுவே காரணம், தீர்வுக்கும் அதுவே தேவை என்பதை இயக்குநர் சொல்ல வந்ததை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சிக்கலுக்கான தீர்வுகளை முன்வைத்த விதத்தில் இயக்குநர் சொதப்பியிருக்கிறார்.

சத்யராஜ் தன் மகளுடன் உதவிக்காக அலறும் நேரத்தில் வேறு வழிகளில் முயற்சித்திருக்கலாம். வரலட்சுமி ஏன் அவசரப்படுகிறார், கிஷோரும் விவேக் ராஜகோபாலும் மோதும் இடத்துக்கு எப்படி வருகிறார் என்ற கேள்விகளுக்கு லாஜிக்கான பதில் இல்லை. நல்ல கதைக்களத்தை வைத்துக்கொண்டு முடிக்கத் தெரியாமல் இயக்குநர் தடுமாறியிருப்பது படத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x