Published : 27 Nov 2023 07:55 PM
Last Updated : 27 Nov 2023 07:55 PM

‘எந்த கடவுளும் கறி சாப்டா தப்புன்னு சொன்னதில்ல’ - நயன்தாராவின் ‘அன்னபூரணி’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘அன்னபூரணி’. இதில் நயன்தாரா, நாயகியாக நடித்துள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: இந்தியாவிலேயே ‘பெஸ்ட் செஃப்’ஆக வேண்டும் என கனவுடன் இருக்கும் நயன்தாராவுக்கு, ‘தெருவுல கிரிக்கெட் விளையாட்ற எல்லோரும் சச்சினாக முடியாது’, ‘பஸ் கன்டெக்டர்ஸ் எல்லோரும் சூப்பர் ஸ்டாராக முடியாது’ என கூறி குடும்பம் ஆதரவளிக்க மறுக்கிறது. ‘புடிச்சத பண்ணா லட்சத்துல ஒருத்தர் இல்ல, லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார்’ ஆகலாம் என தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் நயன்தாரா. ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு ஜெய் - நயன்தாரா - சத்யராஜை ஒரே படத்தில் காண முடிகிறது. ட்ரெய்லர் முழுக்க சமையல் கலைஞராக ஆசைப்படும் நயன்தாராவின் போராட்டமாக கடக்கிறது.

‘எந்தக் கடவுளும் கறி சாப்டா தப்புன்னு சொன்னதில்ல’ என்ற ஜெய்யின் வசனம் ஈர்க்கிறது. அத்துடன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாரா ‘நான் நான்வெஜ் சாப்ட தப்பில்லையா’ என கேட்க, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நயன்தாரா இறைச்சியை சமைக்க முயல்வதை வைத்து எதிர்ப்பு எழுகிறது. இந்தப் போராட்டங்களை கடந்து அவர் எப்படி வெல்கிறார் என்ற படத்தின் கதைக்களத்தை ட்ரெய்லர் உணர்த்துகிறது. டிசம்பர் 1-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ட்ரெய்லர் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x