ரசிகர்கள் காட்சிக்கு வழிகாட்டு விதிமுறைகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய தகவல்

ரசிகர்கள் காட்சிக்கு வழிகாட்டு விதிமுறைகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய தகவல்
Updated on
1 min read

சென்னை: புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய வழிகாட்டு விதிமுறைகளைப் பிறப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல்வேறு திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்தத் திரைப்படங்கள் வெளியாகும், ரசிகர்களுக்கான காட்சிகள் திரையிடப்படுகிறது. அந்தக் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த வேண்டும். பொது அமைதியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "புதிய திரைப்படங்கள் வெளியீட்டின், ரசிகர்களுக்கான சிறப்பு காட்சியின்போது, திரையரங்குகள் முன்பு 24 மணி நேரமும் பெருங் கூட்டமாக நின்று கொண்டு பட்டாசு வெடிக்கின்றனர்.மேலும் ப்ளக்ஸ் பேனர்கள், கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால், போக்குவரத்தும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்தக் காட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புதிய திரைப்படங்கள் வெளியாகும் போதும், ரசிகர்கள் காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்போதும், பொது அமைதியை பேணவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இதுதொடர்பாக உள்துறை செயலர் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரசிகர்கள் காட்சிகளால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் விளக்கவில்லை. அரசு உள்துறை செயலாளர் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in