

‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண்.
ஏப்ரல் 2-ம் தேதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் வெற்றி பெற்றது. இதனால் படக்குழுவினர் 3-ம் பாகம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். இதனிடையே, இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இதனிடையே ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் ராம்சரண். ‘பெடி’ படப்பிடிப்பு தளத்தில் ‘வாழ 2’ படக்குழுவினரை சந்தித்த புகைப்படத்தினை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ராம்சரண் “’வாழ 3’ படக்குழுவினருடன் உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ]மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், தெலுங்கு ரசிகர்களையும் சென்றடைய உள்ளது.
சாஹு காரபாடி மற்றும் அர்ச்சனா இருவரும் இப்படத்தினை பெரியளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தின் உந்துசக்தியாக திகழும் விபின் தாஸ் மற்றும் இயக்குநர் சவின் எஸ்.ஏ மற்றும் இளம் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
விபின் தாஸ் கதையினை சவின் எஸ். ஏ இயக்கி முழுக்க புதுமுகங்கள் நடித்து வெளியான படம் ‘வாழ 2’. எந்தவித பெரிய விளம்பரப்படுத்துதலும் இல்லாமல் வெளியான இப்படம் மலையாளத்தில் பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.