

உக்ரைன்– ரஷ்யா போரின் பின்னணியில் இந்தியா மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்று பெயர் வைத்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் உருவாகும் படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இதில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ், ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வெளிநாட்டு நடிகர்கள் மற்றும் பல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர்.
மோகன்லாலின் 367-வது படமான இதை, ‘மேப்படியான்’ படத்தை இயக்கிய விஷ்ணு மோகன் எழுதி இயக்குகிறார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக பைஜு கோபாலன், வி.சி.பிரவீன் பணியாற்றுகின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
மோகன்லால் விரைவில் இதன் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார். போலந்து, கசகஸ்தான், டெல்லி, டேராடூன், கொச்சி ஆகிய இடங்களில் மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘துரந்தர்’ இசையமைப்பாளர் ஷாஷ்வத் சச்தேவ் இசை அமைக்கிறார். புஷ்பா, புஷ்பா 2 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மிரோஸ்லா குபா ப்ரோசெக் ஒளிப்பதிவு செய்கிறார்.