

தமிழில், லிங்குசாமி இயக்கிய ‘த வாரியர்’, வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி, அடுத்து கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ஜெயம் ரவியின் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இப்போது மீண்டும் இந்திக்குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்கத்தில் டைகர் ஷெராஃபுடன் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், இந்தியில் நடிப்பது எனக்கு சிறப்பாக இருக்கும் என்று உணர்ந்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் போல நான் கற்றுக்கொண்டு நடிக்க வேண்டியதில்லை. இந்தி தெரியும் என்பதால் வசனங்களின் அர்த்தம் புரியும். இந்தியில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தன.
கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஒப்பந்தமாகவில்லை. இந்தித் திரையுலகில் பணிபுரியும் முறை வித்தியாசமானது. அவர்கள் அனைத்து படப்பிடிப்பு ஷெட்யூலையும் ஒன்றாகவே திட்டமிடுகிறார்கள்.தென்னிந்திய சினிமாவில் பிரித்து பிரித்து நடத்துவார்கள். இதனால் இந்தி பட வாய்ப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.