

நடிகை டாப்ஸியும் கங்கனா ரனாவத்தும் சில வருடங்களுக்கு முன் கடும் மோதலில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களில் இவர்கள் மோதல் போக்கில் ஈடுபட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. தனக்கு வரும் பட வாய்ப்புகளை டாப்ஸி பறிப்பதாக கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார்.
அவர் நடிக்கும் படங்களை மாபியாக்கள் தயாரிக்கின்றனர் என்றும் கூறியிருந்தார். கங்கனாவின் சகோதரி ரங்கோலி, டாப்ஸியை ஒரு மலிவான நகல் என்றும் பி-கிரேடு நடிகை என்றும் கூறியிருந்தார். அதற்கு டாப்ஸியும் பதிலளித்தார்.
இந்நிலையில், இப்போது டாப்ஸி அளித்துள்ள பேட்டியில் எனக்கும் கங்கனாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். “நான் எப்போதாவது அவருடன் சண்டையிட்டிருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டு பேர் மோதிக் கொண்டால் சண்டை நடக்கும்.
நான் ஒருபோதும் அதைச் செய்யவில்லை. கங்கனா எனக்கு சீனியர். அவருடன் பணிபுரிவதிலோ அல்லது அவருடன் நட்பாக இருப்பதிலோ எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
அவருடைய சகோதரி என்னை ‘மலிவான நகல்’ என்று அழைத்தார். அவர் சிறந்த நடிகை என்றால், அவருடைய நகல் என்று அழைப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கங்கனாவுக்கு எதிராக நான் எதுவும் பேசியதில்லை. நான் சொன்னது போல், என் தரப்பிலிருந்து, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை.
ஆனால், அதிலிருந்து யாரோ ஒருவர் ஏதோ ஒரு வகையில் பயனடைந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அனுபவ் சின்ஹா இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள ‘அஸ்ஸி’ படம் பிப்.20-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.