

பாடகரும் இசை அமைப்பாளருமான சங்கர் மகா தேவன்
உலக அளவில் இந்திய இசை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகப் பாடகரும் இசை அமைப்பாளருமான சங்கர் மகா தேவன் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்திய இசை இன்று உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்திய கலைஞர்கள் சர்வதேச இசை மேடைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி புதிய உயரங்களை எட்டியுள்ளனர். இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், தற்போது உலகமே நம்மை உற்றுநோக்கி வருகிறது.
மொபைல் போன் மூலமாகவே உலக இசையை ஒரே கிளிக்கில் கேட்க முடிகிறது. அதேபோல், நமது இசையும் உலக மக்களின் கைபேசிகளை எளிதாகச் சென்றடைவதால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது இசை மரபின் கலாசாரம் மற்றும் அதன் மகத்துவத்தை அவர்கள் தற்போது புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
பாரம்பரிய இசையும், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களும் இணையும் போது மிகவும் சக்தி வாய்ந்த கூட்டணியாக மாறி, பெரிய சாதனைகளை உருவாக்குகிறது. தற்போது உலகளவில் மிகப்பெரிய இசைக் கூட்டணிகள் உருவாகி வருகின்றன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுடன் எங்கள் ‘சக்தி’ இசைக் குழு மேற்கொண்ட பயணமும், அதற்கு கிடைத்த சர்வதேச விருதுகள் மற்றும் அங்கீகாரங்களும் சிறந்த எடுத்துக்காட்டு. வரும் காலங்களில் இந்தியர்கள் பல சர்வதேச விருதுகளை வெல்வார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சங்கர் மகாதேவன் கூறினார்.