குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: நடிகர் கமால் ஆர் கானுக்கு ஜாமீன்
மும்பை அந்தேரியில் உள்ள ஒஷிவராவில் நாளந்தா சொசைட்டி என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. கடந்த 18-ம் தேதி அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இதில் 2வது மாடியில் உள்ள எழுத்தாளர் நீரஜ் குமார் மிஸ்ரா என்பவரது வீட்டிலும் 4-வது மாடியில் இருந்த மாடல் பிரதீக் பெய்ட் வீட்டிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. குடியிருப்பு வாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி இந்தி நடிகர் கமால் ஆர் கானை கைது செய்தனர். 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர். உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகவும், யாருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் கமால் ஆர் கான் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில் மும்பை ரயில்வே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சனா ரயீஸ் கான் கூறும்போது, “அவரது கைது தன்னிச்சையான முறையில் அரசியலமைப்புப் பாதுகாப்புகளை முற்றிலும் புறக்கணித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிற்காது. இது சட்ட செயல்முறையின் துஷ்பிரயோகம் மட்டுமே” என்று தெரிவித்தார்.
