

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் மூன்றாவது சீசன் தொடக்க விழாவுக்காக குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றார். அவர் தனது சொந்த அணியை ஆதரிக்க அங்கு சென்றிருந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர். அவர்களுக்கு சூரத் விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், நடிகர் அமிதாப்பச்சன் அவருடைய நண்பரும் தொழிலதிபருமான சுனில் ஷாவின் பங்களாவுக்குச் சென்றார். இதைக் கண்ட ரசிகர்கள் அவரைப் பார்க்கக் கூடினர். கூட்டம் கட்டுப்படுத்த முடியாததாக மாறியதை அடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பங்களாவின் கண்ணாடி நுழைவாயில் இடிந்து விழுந்தது. சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தி, அமிதாப் பச்சனை பாதுகாப்பாக ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.