‘ஆக்ரி ரஸ்தா’ 33 ஆண்டுகள்: கே.பாக்யராஜ் குறித்து அமிதாப் பச்சன் ட்வீட்

‘ஆக்ரி ரஸ்தா’ 33 ஆண்டுகள்: கே.பாக்யராஜ் குறித்து அமிதாப் பச்சன் ட்வீட்
Updated on
1 min read

‘ஆக்ரி ரஸ்தா’ படம் வெளியாகி 33 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, கே.பாக்யராஜ் குறித்து ட்வீட் செய்துள்ளார் அமிதாப் பச்சன்.

பாரதிராஜா இயக்கத்தில் 1985-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘ஒரு கைதியின் டைரி’. கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், ரேவதி மற்றும் ராதா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். இந்தப் படத்தின் கதையை கே.பாக்யராஜ் எழுதினார்.

ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் சாதனை படைத்தது. எனவே, இந்தப் படத்தை இந்தியில் ‘ஆக்ரி ராஸ்தா’ என்ற பெயரில் இயக்கினார் கே.பாக்யராஜ். கமலைப் போலவே இரண்டு வேடங்களில் நடித்தார் அமிதாப் பச்சன். ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர். முக்கியக் கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடித்தார்.

1986-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. நேற்றுடன் இந்தப் படம் ரிலீஸாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது குறித்து, “ ‘ஆக்ரி ரஸ்தா’ படம்தான் அமிதாப் பச்சன் நடித்ததிலேயே மிகச்சிறந்த படம் என என் அம்மா கூறுவார்” என்று ட்விட்டரில் ஒருவர் அமிதாப் பச்சனைக் குறிப்பிட்டு பதிவிட்டார்.

அதை ரீட்வீட் செய்த அமிதாப் பச்சன், “நன்றி. அதுவொரு மிகச்சிறந்த அனுபவம் மற்றும் அருமையான கதை. கே.பாக்யராஜ், அப்போது எனக்குப் புதியவர். ஆனால், இயக்கத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in