Published : 31 May 2023 12:05 PM
Last Updated : 31 May 2023 12:05 PM

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் | அரசு அமைதி காப்பது வெட்கக்கேடானது: பா.ரஞ்சித்

சென்னை: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து அரசு மவுனம் காப்பது வெட்கக்கேடானது என்றும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் கையாளப்பட்ட விதத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை நெஞ்சில் ஏந்திய சாம்பியன்கள் எந்தவிதமான கண்ணியமும் மரியாதையும் இன்றி நடத்தப்பட்டுள்ளனர். சாம்பியன்கள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் வீசப் போகும் முடிவுக்கோ அல்லது அவர்களது போராட்டத்திற்கோ அரசு பதிலளிக்காமல் மவுனம் காப்பது வெட்கக்கேடானது. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு குரல் கொடுத்து, எம்பி பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை உடனடியாக நீக்கவும், அவருக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் நான் கோரிக்கை விடுக்கிறேன்." இவ்வாறு அப்பதிவில் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x