Published : 24 May 2023 04:48 AM
Last Updated : 24 May 2023 04:48 AM

நடிகர் சரத்பாபு உடல் சென்னையில் தகனம் - ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி

உடல்நலக்குறைவால் மரணமடைந்த சரத்பாபுவின் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பாக்யராஜ் - பூர்ணிமா, பார்த்திபன், சூர்யா, கார்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா உள்ளிட்டோர் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர். படங்கள்: பு.க.பிரவீன்

சென்னை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது.

தெலுங்கு திரையுலகில் 1973-ம் ஆண்டு ‘ராம ராஜ்ஜியம்’ என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சரத்பாபு (71). தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் பல தரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் நடித்த ‘உதிரிபூக்கள்’ அவருக்கென தனி அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து அவரது இயக்கத்தில் ரஜினிகாந்துடன் நடித்த ‘முள்ளும் மலரும்’, இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் நடித்த ‘நிழல் நிஜமாகிறது’ போன்ற படங்கள் இவரது நடிப்பை இன்றுவரை பறை சாற்றுகின்றன. அதேபோல் இவர் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்த வேலைக்காரன், அண்ணா மலை, முத்து போன்ற வணிக ரீதியான (கமர்ஷியல்) படங்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தன.

உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு கடந்த 22-ம் தேதி உயிரிழந்தார். அன்று மாலை ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. பின்னர் காலை 9.30 மணி முதல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல், இல்லத்தில் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். நடிகர் ரஜினிகாந்த் சரத்பாபுவின் இல்லத்துக்கு நேரில் வந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, அவரது குடும்பத் தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகராவதற்கு முன்பே சரத்பாபுவை எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவர் அருமையான மனிதர். எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். நானும் அவரும் சேர்ந்து நடித்த அனைத்து படங்களுமே மிகப் பெரிய வெற்றி பெற்றன. என் உடல்நலன் மீது அதிக அக்கறை கொண்ட சரத்பாபு ரொம்ப நல்ல மனிதர். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றார்.

இதேபோல சமக தலைவர் சரத்குமார், திரைப்பட இயக்குநர்கள் பாக்யராஜ், சுரேஷ் கிருஷ்ணா, நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், ராஜேஷ், பார்த்திபன், சூர்யா, கார்த்தி, நடிகைகள் ராதிகா, சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி உள்ளிட்டோரும் சரத்பாபுவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

பின்னர் மதியம் 2.30 மணியளவில் அவரது உடல் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ளமின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x