Last Updated : 19 May, 2017 02:10 PM

 

Published : 19 May 2017 02:10 PM
Last Updated : 19 May 2017 02:10 PM

துப்பறிவாளன் படத்தின் கதைக்களம் என்ன?- இயக்குநர் மிஷ்கின் விளக்கம்

விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்து இயக்குநர் மிஷ்கின் விளக்கமளித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல் , பிரசன்னா , வினய் , கே.பாக்யராஜ் .ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'துப்பறிவாளன்'. கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருள் கொரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

'துப்பறிவாளன்' கதைக்களம் குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது, "தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றும் துப்பற்றியும் வேலை செய்யும்அதிகாரியைப் பற்றிய் படம். அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி இப்படம் பேசும்.

இத்திரைப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறிவு நாவலான 'ஷெர்லாக் ஹோம்ஸ்' மற்றும் தமிழில் வெளிவந்த பிரபல துப்பறிவு நாவலான 'துப்பறியும் சாம்பு' போன்ற ஒரு கதையாக இருக்கும். தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை ’துப்பறிவாளன்’ நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்.

கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடித்துள்ளார். ’யாதும் ஊரே ; யாவரும் கேளிர்’ என்று பாடிய கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் பெயரைத்தான் இப்படத்தின் நாயகனுக்கு வைத்துள்ளேன். இப்படத்தில் விஷால் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் பலமான கதாபாத்திரமாகும். படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார்.

ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள் , மெய்சிலிர்க்கவைக்கும் சண்டைக் காட்சிகள் , இதோடு இணைந்து ஒரு மெல்லிய காதல். இது தான் 'துப்பறிவாளன்' ஸ்பெஷல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும்.

ஒரு நாள் நானும் தம்பி விஷாலும் பேசிக்கொண்டிருந்த போது "துப்பறிவாளன் படத்தைப் பொறுத்தவரை இசை வெளியீட்டு விழாவுக்கு பதிலாக 'ஆக்சன் வெளியீட்டு விழா' ஒன்றை ஏற்பாடு செய்வோம்" என்று வித்தியாசமான எண்ணத்தைக் கூறினார். அந்த அளவுக்கு இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது.

விஷால் என்னுடைய மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் , அவர் என்னுடைய அன்பான தம்பி. நான் இதுவரை பணியாற்றிய கதாநாயகர்களில் விஷாலை போன்று எனக்கு மிகவும் நெருக்கமானவர் யாருமில்லை. நான் அவருடைய கருத்துக்களை ஏற்றுகொள்வேன் , அவரும் என்னுடைய கருத்துக்களை ஏற்றுகொள்வார். என்னுடைய படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் வந்தாலும் அது நிச்சயம் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும்.

'அஞ்சாதே' படத்தில் பூ போட்டு செல்லும் அந்த பாட்டியில் ஆரம்பித்து நான் இயக்கிய பல படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஒரு காட்சியில் வந்தாலும் அதனுடைய வாழ்கையை நமக்கு கூறி செல்லும். பாக்யராஜ் துவங்கி இப்படத்தில் பலர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நிச்சயம் அனைத்து கதாபாத்திரமும் கவனிக்க வைக்கும் கதாபாத்திரமாக இருக்கும்.

நான் அதிமாக புதியவர்கள் வைத்து படம் இயக்க கூடிய ஒரு இயக்குநர். இப்படத்தில் விஷாலை போன்ற பெரிய நடிகர் நடிப்பது படத்துக்கு மிகப்பெரிய பலத்தை தந்துள்ளது. நான் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படத்தில் கூட புதிய நாயகன் , புதிய நாயகி தான் நடிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

’துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விஷாலே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x