Published : 24 Apr 2023 04:07 PM
Last Updated : 24 Apr 2023 04:07 PM

‘பாகுபலி’ இல்லை என்றால் ‘பொன்னியின் செல்வன்’ உருவாகியிருக்காது - மணிரத்னம்

‘பாகுபலி’ படத்தை ராஜமெளலி இரண்டு பாகங்களாக உருவாக்காவிட்டால் நானும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்த பாகம் வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னை, கோவை, கொச்சி, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் படக்குழு ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்து வருகிறது.

ஹைதராபாத்தில் நடந்த இந்த சந்திப்பில் இயக்குநர் மணி ரத்னம் பேசுகையில், ``தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த விஷயத்தை நான் ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் மறுபடியும் சொல்கிறேன். நான் ராஜமெளலிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ‘பாகுபலி’ இரண்டு பாகங்களாக அவர் உருவாக்காவிட்டால் நானும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்க மாட்டேன். இது எனக்கு புது பாதையை உருவாக்கி தந்தது. நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத்துறையில் பலருக்கும் கொடுத்தது. இதை அவரை சந்தித்தும் நான் சொல்லி இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x