Published : 18 Apr 2023 02:25 PM
Last Updated : 18 Apr 2023 02:25 PM

‘பிச்சைக்காரன் 2’ ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப் பெரிய நஷ்டம்: விஜய் ஆண்டனி பதில் மனு

சென்னை: ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜ கணபதி என்பவர் ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே எடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை எடுத்துள்ளனர். எனவே, இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி விஜய் ஆண்டனி சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், “ஆய்வுக் கூடம் படம் குறித்த எந்த தகவலும் எனக்கு தெரியாது. அந்தப் படத்தை தாம் பார்த்தது கூட இல்லை. இந்த வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்தப் படத்தை பார்த்தேன். ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கும் ‘ஆய்வுக்கூடம்’ படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.

பிச்சைக்காரன் 2 படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கடைசி நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வெளியிடுவது தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக எனக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது.

பிச்சைக்காரன்-2 படத்தின் கதை கரு பொதுவெளியில் உள்ளது. இதே கதை கருவோடு 1944-ம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில், பல படங்கள் வெளியாகி உள்ளன. இந்த கதையின் கருவை மனுதாரர் உரிமை கொண்டாட முடியாது" என்று அதில் கோரப்பட்டிருந்தது.

பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து, நீதிபதி எஸ்.சவுந்தரிடம் முறையிடப்பட்டபோது, இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஏப்ரல் 25-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x