Published : 29 Mar 2023 03:02 PM
Last Updated : 29 Mar 2023 03:02 PM

‘பத்து தல’ படத்தின் அதிகாலைக் காட்சிகள் ரத்து - சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம்

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கு அதிகாலை காட்சிகள் இல்லாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ திரைப்படத்தின் தழுவலாக இப்படம் இருந்தபோதிலும் பெரும்பாலான திரைக்கதை மாற்றப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்திருந்தார். படம் நாளை (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் அதிகாலைக் காட்சிகள் எதுவும் திரையிடப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் காட்சி 4.30 மணி அளவில் திரையிடப்பட்டது. அந்த வகையில் ரசிகர்கள் ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சி அதிகாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படத்தின் முதல் காட்சி தமிழ்நாடு முழுவதும் 8 மணிக்கு தொடங்குகிறது. ‘விடுதலை’ படத்தின் முதல் காட்சி 9 மணி அளவில் திரையிடப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொங்கலையொட்டி வெளியான படங்களின் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி சம்பவங்களும், அரசின் அனுமதியின்மையும் அதிகாலைக் காட்சிகள் இல்லாததற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x