Last Updated : 26 Dec, 2016 01:26 PM

 

Published : 26 Dec 2016 01:26 PM
Last Updated : 26 Dec 2016 01:26 PM

நாடு முழுவதும் தங்கல் வசூல் ரூ.100 கோடி: தமிழிலும் பெரும் வரவேற்பு

ஆமிர் கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'தங்கல்' இந்திய அளவில் வசூலில் 100 கோடியைத் தாண்டியிருக்கிறது. தமிழிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் 100 கோடியைத் தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இப்படம் பெரும் வசூலைக் குவித்து வருவதாக இந்தி திரையுலகின் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும், பண மதிப்பு நீக்கம், புதிய ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு ஆகியவற்றை கடந்து இச்சாதனையை நிகழ்த்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் 'தங்கல்' திரைப்படத்தின் வசூல் 'கத்தி சண்டை' மற்றும் 'பலே வெள்ளையத் தேவா' ஆகிய படங்களின் வசூலைத் தாண்டியுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். தமிழ்ப் படங்களின் காட்சிகளைக் குறைத்து, 'தங்கல்' படத்துக்கு காட்சிகளை அதிகரிக்கப்பட்டுள்ளன. '3 இடியட்ஸ்' படத்துக்குப் பிறகு ஆமிர் கானின் படம் ஒன்று, தமிழ்ப் படங்களின் வசூலைக் கடந்திருப்பது 'தங்கல்' மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களைக் கவர்ந்திருப்பது மட்டுமன்றி முன்னணி இயக்குநர்கள் பலரும் 'தங்கல்' படம் குறித்து தங்களுடைய சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்கள். அவற்றில் சில:

கெளதம் மேனன்: என்ன ஒரு படம் !! உணர்ச்சிகரமாகவும், பொழுதுபோக்காகவும் இருந்தது. கடந்த 5 வருடங்களில் சிறந்த படம். நான் ஒரு புது மாணவனைப் போல உணர்கிறேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்!

அறிவழகன்: நிஜ வாழ்க்கை சம்பவங்களையும், கற்பனை அம்சங்களையும் மிக அழகாக ஒன்று சேர்த்து அதில் திருப்பங்களையும், உணர்ச்சிகரமான காட்சிகளையும் தொய்வின்றி தந்திருக்கிறார்கள். ஒரு விளையாட்டைப் பற்றிய திரைப்படம் என்பதைத் தாண்டி பெண்கள் முன்னேற்றம் குறித்த உத்வேகமளிக்கும் படம். சமீபத்தில் தங்களை பெண்ணிய படைப்புகள் என்று கூறிக்கொண்ட சில திரைப்படங்களுக்கு மிகப்பெரிய அடி.

லிங்குசாமி: அற்புதமான படம். மிகவும் உருக்கமாக இருந்தது. நமது குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்பும் திரைப்படம். ஆமிர் கானுக்கும், யுடிவி நிறுவனத்துக்கும் வாழ்த்துகள்

குஷ்பு: தங்கல் ஆமிர்கானும், குழுவும் இதோ வந்துவிட்டார்கள் தேசிய விருதுகளை வாங்க.

ராதிகா சரத்குமார்: தங்கல் - அற்புதமாக, அட்டகாசமாக எழுதப்பட்ட திரைப்படம். ஆமிர் கான், நீங்களும் அந்தப் பெண்களும் ஊக்கமளிக்கும் நடிப்பைத் தந்துள்ளீர்கள். இந்திய சினிமாவுக்கு தலை வணங்குகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x