Published : 17 Jan 2023 03:56 PM
Last Updated : 17 Jan 2023 03:56 PM

“அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம்” - ராகவா லாரன்ஸை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா

‘ஜிகர்தண்டா 2’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ‘அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம்’ என்று ராகவா லாரன்ஸை நடிகர் எஸ்.ஜே.சூர்யா பாராட்டியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு தினத்தன்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அறிமுக டீசரும் அன்றைய தினமே வெளியானது. ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “36 நாள் ஒரே ஷெட்யூல். என்ன மாதிரியான அற்புதமான செட், ஒளிப்பதிவு, புரொடக்‌ஷன் வேல்யூ. இந்த வாய்ப்பளித்த கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி. அருகில் நான் பார்த்த அற்புத உள்ளம் ராகவா லாரன்ஸ்” எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x