Published : 11 Jan 2023 04:05 AM
Last Updated : 11 Jan 2023 04:05 AM

வெளியானது 'துணிவு', 'வாரிசு' திரைப்படங்கள் - ரசிகர்கள் விடிய விடிய உற்சாக கொண்டாட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியானது. அதேபோல் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணி அளவில் உலகம் முழுவதும் வெளியானது.

இரு நடிகர்களின் படங்களின் வெளியீட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவர்களது ரசிகர்கள் சிறப்பு காட்சியை சிறப்பாக கொண்டாடினர். சென்னை ரோகிணி திரையரங்கில் தொடங்கி நேற்று இரவு முதலே அஜித் ரசிகர்கள் திரண்டு பாடல் இசைத்து அமர்க்களம் செய்தனர். மதுரை, கோயம்புத்தூர், வேலூர் என தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு திரண்டு சிறப்புக் காட்சியை வரவேற்றனர்.

இதன்மூலம் தமிழகத்தில் முதல் முறையாக நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்ட படம் நடிகர் அஜித்குமாரின் "துணிவு" என்றானது.

முன்னதாக, நேற்றிரவு வாரிசு படத்துக்கு ப்ரிவ்யூ ஷோ போடப்பட்டது. இதில் திரை நட்சத்திரங்கள் பலருடன் அப்படக்குழுவைச் சேர்ந்த தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் படம் பார்த்தனர். அவர்களுடன் விஜய்யின் தயார் ஷோபாவும் படம் பார்த்தார்.

அதேபோல் சென்னை வெற்றி திரையரங்கில் துணிவு படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார் அதன் தயாரிப்பாளர் போனி கபூர்.

பேனர்கள் கிழிப்பு: கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் நேரடியாக மோதுவதால் பல இடங்களில் பரபரப்புடனே காணப்பட்டது. கோவை திரையரங்கின் ஒன்றின் முன் நள்ளிரவு காட்சிக்கு வந்த அஜித் ரசிகர்கள் சிலர் கட்டுப்பாடுகளை மீறியதால் அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.

திண்டுக்கல், சங்கரன்கோவில் போன்ற இடங்களில் துணிவு படத்தின் நள்ளிரவு காட்சி ரத்து செய்யப்பட்டது. திண்டுக்கல்லில் ரசிகர்களின் தொடர் கூச்சலை அடுத்து 1 மணிநேரம் தாமதமாக 2 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனால், சங்கரன்கோவிலில் ஒரு மணி காட்சி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் திரும்பிச் சென்றனர். தென்காசியில் துணிவு, வாரிசு என இரு திரைப்படங்களின் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை ரோகிணி திரையரங்கில் அஜித்தின் துணிவு படம் திரையிடப்பட்ட சமயத்தில் ரசிகர்கள் சிலர் கூடி வாரிசு மற்றும் துணிவு பட பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவ போலீஸார் வந்து ரசிகர்களை கலைத்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட போலீஸார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x