Published : 10 Jan 2023 03:27 PM
Last Updated : 10 Jan 2023 03:27 PM

'துணிவு', 'வாரிசு' படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட் தடை

சென்னை: 'துணிவு' மற்றும் 'வாரிசு' திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும் நாளை (ஜன.11) ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இரண்டு படங்களையும் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், "இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, இந்த இரண்டு திரைப்படங்களையும் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே சட்டவிரோத இணையதளங்களில் இந்த இரண்டு படங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'துணிவு' மற்றும் 'வாரிசு' திரைபடங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x