Last Updated : 22 Dec, 2016 10:18 AM

 

Published : 22 Dec 2016 10:18 AM
Last Updated : 22 Dec 2016 10:18 AM

இதுதான் நான் 56: எனக்கு ரொம்ப பிடிச்ச படம்!

என் சினிமா கேரியர்ல ரெண்டு பாட்டுங்க பாடுற வாய்ப்பு எனக்கு அமைஞ்சது. ‘உள்ளம் கொள்ளைப் போகுதே’படத்தில் ‘கிங்குடா’ங்கிற பாட்டும், ‘சுயம்வரம்’ படத்தில் ‘சிவ சிவ சங்கரா’ங்கிற பாட்டும்தான் அது.

‘கிங்குடா’பாட்டுக்கு கார்த்திக் ராஜா மியூசிக். ‘‘ஓபனிங், இப்படி இருந்தா நல்லாயிருக்கும்; அப்படி இருந்தா நல்லா இருக்கும்’’னு ஜாலியா நான் பாடிட்டிருந்ததை, இயக்குநர் சுந்தர் சி பார்த்துட்டு, ‘‘நீங்களே இந்தப் பாட்டை பாடிடுங்க’’ன்னு மைக்கை கையில் கொடுத்துட்டார். ‘சுயம்வரம்’ படத்தில் வர்ற ‘சிவசிவ சங்கரா’ பாட்டும் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தால்தான் பாடினேன்.

இப்போ கூட காரில் போறப்ப ஏதா வது ஒரு பாட்டோட வரிகளை முணு முணுப்பேன். உடனே காரில் இருக் கிற ஆடியோ சிஸ்டத்தை டிரைவர் போட்டுவிடுவார். அப்போ பக்கத்தில் இருக்கிற ஃபிரெண்ட், ‘‘பார்த்தியாடா பிரபு... நீ பாடுறதை கேட்க முடியாமத்தான் இப்படி பாட்டு போடுறார்’’னு கலாட் டாவா சொல்வான்.

எனக்கு ரொம்ப நாளாவே இருக்கிற ஒரு சந்தேகம் இது. எந்த மொழியில் பாட்டுங்க வந்தாலும் அதை பாடின பாடகருக்குக் கிடைக்கிற அங்கீகாரம் மாதிரி கொரியோகிராஃபருக்கும் அந்த அளவுக்கு அடையாளம் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு நான் நினைச் சிருக்கேன்.

படத்தில் ஒரு ஹீரோ லிப் மூவ் மெண்ட் கொடுத்து டான்ஸ் ஆடுறப்ப, அந்தப் பாட்டை வேறொருத்தர் பாடியிருக் காருன்னு ஈஸியா மக்களும் புரிஞ்சிக் கிறாங்க. ஏன், அவங்களோட பேர் வரைக்கும் கரெக்டா சொல்றாங்க. ஆனா, அந்தப் பாட்டுக்கு கொரியோகிராஃபர் யாருன்னு அவங்க தெரிஞ்சிக்கிறதே இல்லை. இதுமட்டும் ஏன்னு எனக்குப் புரியலை.

நானே இப்படி கேள்விங்க கேட்டா லும், ஒரு பாட்டை கேட்கும்போது என்னை அறியாமலேயே, ‘‘என்னமா பாடியிருக்காங்க!’’ன்னு சொல்லியிருக் கேன். அதுதான் குரலோட வலிமை. சிலரோட பேச்சுக்கூட அப்படித்தான். அறிஞர் அண்ணா, கலைஞர் சார் பேசும்போதெல்லாம் அதில் அப்படி ஓர் ஈர்ப்பு இருக்கும். அதுவும் ஒரு கலைதான்! கின்னஸ் சாதனைக் காக ஒரே நாள்ல ஷூட் பண்ணப் படம்தான், ‘சுயம்வரம்’. அதில் வர்ற ‘சிவசிவ சங்கரா’ பாடலை மூணு மணி நேரத்துல ஷூட் பண்ணி முடிச்சோம். அந்த பாட்டே ஜாலியா இருக்கும். அதே மாதிரி சூப்பர் ஹிட்டாவும் ஆச்சு. படத்தில் நான் நடிச்ச பகுதியை இயக்குநர் கே.சுபாஷ் சார்தான் இயக்கினார்.

சுபாஷ் சார் நல்ல திறமைசாலி. இப்போ தமிழ்ல ஒரு படம் டைரக்ட் பண்றதுக்கான வேலையில இறங்கி யிருக்கேன். அந்தப் படத்தோட கதை சுபாஷ் சார் எழுதினதுதான். ‘‘நீங்க நடிச்ச படங்கள்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்சப் படம் எது?’’ன்னு சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ‘ஏழையின் சிரிப்பில்’னு சொன்னேன். எனக்கு ரொம்பவும் பிடிச்சப் படம் அது. ஹீரோ, மனசுல கஷ்டத்தை வெச்சுட்டு எப்பவுமே ஜாலியா சந்தோஷத்தை வெளியில் காட்டுற கேரக்டர். இப்படி இந்தப் படத்தைப் பிடிக்க பல காரணங்கள் இருந்துச்சு. அந்தப் படத்தின் இயக்குநரும் கே.சுபாஷ் சார்தான்.

‘ஏழையின் சிரிப்பில்’ நாற்பத்தி ரெண்டே நாட்கள்ல ஷூட் பண்ணப் படம். இப்போ கிரீன்பார்க் ஹோட்டல் இருக்கே, அந்த இடத்தில் இருந்த வாகினி ஸ்டுடியோவில் பஸ் ஸ்டாண்ட் செட் போட்டு பெரும்பகுதியை எடுத்தோம். இப்பவும் அந்தப் பக்கம் போனா அந்த பஸ் ஸ்டாண்ட் செட் ஞாபகத்துக்கு வந்துடும்.

அதே மாதிரி ‘நினைவிருக்கும் வரை’, ‘123’ படங்களையும் அவர்தான் டைரக்ட் பண்ணினார். ‘நினைவிருக்கும் வரை’ படத்தை சென்னையில உள்ள ஒரு குப்பத்தில்தான் எடுத்தோம். அந்த நேரத்தில் அங்கே நிறையப் பேர் எனக்கு ஃபிரெண்ட் ஆனாங்க. அந்த ஃபிரெண்ட்ஷிப் ஏழெட்டு வருஷம் வரைக்கும் தொடர்ந்து இருந்துச்சு. அவங்க எல்லாரும் இப்போ பெரியவங்களா வளர்ந்திருப்பாங்க. அவங்கள்ல ரெண்டு, மூணு முகம் இப்பவும் ஞாபகத்தில் இருக்கு. ஷூட்டிங் நடந்தப்போ பெரும்பாலும் அங்கேதான் சாப்பிடுவேன். ஒவ்வொருத்தர் வீட்டுல இருந்தும் ஒவ்வொண்ணு சமைச்சு சாப்பிட எடுத்துட்டு வரச் சொல்வேன். அவங்களும் அதே மாதிரி செய்வாங்க. ரயில் பெட்டி கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போகிற மாதிரி ஹைதராபாத், மும்பைன்னு மாறி மாறி போனதுக்கு அப்புறம் கொஞ்ச வருஷத்துல அந்த ஃபிரெண்ட்ஷிப் எல்லாம் இப்போ இல்லை.

அந்தக் குப்பத்தில்தான், ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ பாட்டை ஷூட் பண்ணோம். இந்தப் படத்தில்தான் சுபாஷ் சார் பாடலாசிரியரா அறிமுகம் ஆனார்னு நினைக்கிறேன். பத்து நிமிஷத்துல எழுதி முடிச்சப் பாட்டுதான் அது. மாஸ் ஹிட்டாச்சு. அதே மாதிரி ‘ஏழையின் சிரிப்பில்’படத்தில் வர்ற ‘யப்பா யப்பா ஐயப்பா’ பாட்டும் பத்து நிமிஷத்தில் எழுதி முடிச்சப் பாட்டு.

சமீபத்தில் அவர் இறந்த செய்தி கேட்டு, ‘நல்லா சுறுசுறுப்பா ஓடியாடி வேலை பார்த்துட்டிருந்தவரை போய் பார்த்தா, ‘படுத்திருப்பாரே… எப்படி பார்க்குறது?’ன்னு மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. ஆனா, அப்புறம் வீட்டுக்குப் போனேன். அவரோட பொண்ணு என்கிட்ட வந்து, ‘‘ரொம்ப தேங்ஸ் சார்!’’னு சொன்னாங்க. ‘‘எதுக் குங்க?’’ங்கிற மாதிரி பார்த்தப்போ, ‘‘உங்களாலதான் சார் அப்பாவோட முகத்தை சினிமாவுல பார்க்க முடிஞ்சுது!’ன்னு சொன்னாங்க.

எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. ‘யப்பா யப்பா ஐயப்பா’ பாட்டுல, ‘என் பணம் பணம்; உன் பணம் பணம்’னு வர்ற பிட்ல சுபாஷ் சாரை நடிங்கன்னு சொல்லி நான்தான் நடிக்க வெச் சேன். ‘‘என்னப்பா பிரபு... இப்படி சட்டையெல்லாம் கிழிச்சுட்டு நடிக்க வெச்சுட்டே. உன் மைண்ட்ல வெச்சிருந் ததைப் பண்ணிப் பார்த்துட்டே!’ன்னு சிரிச்சிட்டே கேட்டார். நான் கேட்டுக் கிட்டதுக்காகத்தான் அந்தப் பாட்டுல அவர் நடிச்சார். இப்போ அவர் அந்த ஒரு பாட்டுல மட்டும்தான் நம்ம பக்கத்தி லேயே இருக்கிற மாதிரி இருக்கார்.

‘நினைவிருக்கும் வரை’ படத்தைப் பற்றி சொல்றப்ப சுஜாதா மேடத்தோட ஞாபகம் வருது. படத்தில் எனக்கு அம்மாவா நடிச்சாங்க. ஷூட்டிங்ல எப்பவும் அமைதியாதான் இருப்பாங்க. ஆனா, நான் எப்பவும் ஜாலியா சிரிச்சுட்டு, ஷூட்டிங் கேப்ல கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பேன். என்கிட்ட நல்லாப் பேசுவாங்க. நான் அந்த மாதிரி இருக்கிறதைப் பார்த்துட்டு ‘‘ஜாலியா இருக்கீங்களே தம்பி! உங்களைப் பார்க்குறப்ப சந்தோஷமா இருக்கு. எப்பவும் இப்படியே இருங்க!’ன்னு சொன்னாங்க. அவங்களும் இப்போ நம்ம கூட இல்லை.

என்னமோ தெரியலை. இந்த ரெண்டு வாரங்களாவே நம்ம கூட இருந்துட்டு பிரிஞ்சிப் போறவங்களைப் பற்றின நினைவுகள் அதிகம் வந்துட்டே இருக்கு. எனக்கும் அதையெல்லாம் எழுதணும்னு தோணுது.

- இன்னும் சொல்வேன்...



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x