Published : 25 Jul 2022 08:47 PM
Last Updated : 25 Jul 2022 08:47 PM

ஜீவஜோதியின் சட்டப் போராட்டத்தை படமாக்கும் ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல்

'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்ட புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கியிருந்தார். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத் துறையைச் சேர்ந்த பலரும் படத்துக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் அடுத்து மீண்டும் ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். மறைந்த சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள இப்படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 'தோசா கிங்' என்ற பெயரில் இந்தியில் உருவாகும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ஞானவேல், ''நான் பத்திரிகையாளராக இருந்த நாட்களில் இந்த வழக்கைப் பின்பற்றி இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன். திரையில் ஜீவஜோதியின் சட்டப் போராட்டம் மூலம் புதிய பரிமாணங்களை வெளிக்கொண்டுவருவேன் என நம்புகிறேன். சமகால இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான சில படங்களை உருவாக்குவதற்கு பெயர் பெற்ற ஜங்கிலி பிக்சர்ஸுடன் இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

பணியாளரான ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால், வாழ்வில் மேலும் பல உயரத்தை அடையாலாம் என ஜோதிடர் ஒருவர் கூறியதால் ராஜகோபால் 3-வது முறையாக ஜீவஜோதியை திருமணம் செய்துகொண்டார். இதற்காக ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை, ராஜகோபால் கடத்தி, கொலை செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சரவண பவன் உணவகங்களின் நிறுவனர் பி ராஜகோபால் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை18-ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x