Published : 13 Jul 2022 03:31 PM
Last Updated : 13 Jul 2022 03:31 PM

'உலகத்திலேயே யாரும் எடுத்தது கிடையாது' - இரவின் நிழல் படத்திற்கு ரஜினி பாராட்டு

''நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தை உலகளவில் இதுவரை யாரும் எடுத்தது கிடையாது'' என்று 'இரவின் நிழல்' படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு பின்னர் பார்த்திபன், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கியுள்ளார். 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. 'இரவின் நிழல்' படம் நான் லீனியர் 'சிங்கிள் ஷாட்'டில் எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

அதனால், நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது. வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ஜூன் 15-ம் தேதி திரையரங்குகளில் 'இரவின் நிழல்' படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோவில் பேசும் நடிகர் ரஜினிகாந்த், ''பார்த்திபன்... வித்தியாசமாக முயற்சிகள் செய்யவேண்டும் என்று எப்போதும் ஏதாவது செய்யத் துடிக்கிற கலை ரசிகர். நான் லீனியர் சிங்கிள் ஷாட். உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்தது கிடையாது. 29 நிமிடங்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்தார்கள் எனக் காண்பித்துள்ளார்களாம். புல்லரிக்குமாம். இந்தப் படம் கண்டிப்பாக நன்றாகப் போகும்'' எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x