Published : 09 Feb 2022 01:17 PM
Last Updated : 09 Feb 2022 01:17 PM

உடல் தோற்றம் குறித்த கிண்டல்கள் - காஜல் அகர்வால் பதிலடி

உடல் தோற்றம் குறித்த கிண்டலடித்தவர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவருடன் காஜல் அகர்வாலுக்குத் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர் அவரது முகத் தோற்றம் குறித்து கிண்டலடித்துவந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் காஜல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் மிக முக்கியமாக எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் அனுபவித்து வருகிறேன். மேலும் சில பாடி ஷேமிங் கிண்டல்கள்/ மீம்கள் இதை எதுவும் செய்யமுடியாது. அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம், அது மிகவும் கடினமாக இருந்தால், வாழ்வோம் வாழவிடுவோம். இது போன்ற சூழ்நிலைகளை சந்திப்பவர்களுக்கு என்னுடைய யோசனைகள் எதையும் புரிந்து கொள்ளாமல் தங்களைப் பற்றி மட்டுமே யோசிக்கும் சில முட்டாள்களும் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் நம் உடல், எடை அதிகரிப்பு உட்பட பல மாற்றங்களுக்கு ஆட்படுகிறது. ஹார்மோன் மாற்றங்களால் குழந்தை வளரும்போது நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாகி, நம் உடல் பாலூட்டுவதற்குத் தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகும் இடத்தில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உருவாகலாம். சில சமயங்களில் நமது முகங்களில் பருக்கள் தோன்றலாம். நாம் வழக்கத்தை விட மிகவும் சோர்வாகவும் நேரிடும்.

மேலும், பிரசவத்திற்குப் பிறகு, நாம் முன்பு இருந்த அழகை திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் அல்லது கர்ப்பத்திற்கு முன்பு நாம் இருந்த உருவத்தை நம்மாள் திரும்பப் பெற முடியாமலேயே போகலாம்.

இந்த மாற்றங்கள் இயற்கையானவை. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி உங்கள் கணவர், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருப்பது உங்களை மோசமாக உணர வைக்கும். லேசான நீச்சல் அல்லது நடைபயிற்சி உங்கள் மனதைத் தெளிவுபடுத்த உதவும்.

இவ்வாறு காஜல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x