Published : 13 Dec 2021 12:51 PM
Last Updated : 13 Dec 2021 12:51 PM

‘சர்வைவர்’ போட்டியின் வெற்றியாளர் விஜயலட்சுமி: ரூ.1 கோடி பரிசை வென்றார்

‘சர்வைவர்’ போட்டியின் வெற்றியாளராக விஜயலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி 'சர்வைவர்'. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு தீவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக விக்ராந்த், நந்தா, பெசன்ட் ரவி, உமாபதி தம்பி ராமையா, விஜயலட்சுமி, காயத்ரி ரெட்டி, சிருஷ்டி டாங்கே, வி.ஜே.பார்வதி உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர்.

காடர்கள், வேடர்கள் என்று இரு பிரிவுகளாகப் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுப் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தனர். ஒவ்வொரு போட்டியிலிருந்தும் ஒவ்வொரு போட்டியாளர் வீதம் வெளியேற்றப்பட்டு கடைசியாக விஜயலட்சுமி, வானசா, சரண் ஆகியோர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

இந்நிலையில் ‘சர்வைவர்’ இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையில் விஜயலட்சுமி இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அர்ஜுன் வழங்கினார். சமூக வலைதளங்களில் பலரும் விஜயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x