Last Updated : 07 Mar, 2016 09:46 PM

 

Published : 07 Mar 2016 09:46 PM
Last Updated : 07 Mar 2016 09:46 PM

மணிரத்னம் - கார்த்தி பட முதற்கட்டப் பணிகள் தீவிரம்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, சாய் பல்லவி நடிக்கவிருக்கும் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, நானி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து நடிக்க ஒரு புதிய படத்தை மணிரத்னம் தொடங்க திட்டமிட்டார். ஆனால், அக்கதைக்கு நாயகர்கள் தேதிகள் சரியாக அமையாததால் அப்படத்தை ஒத்தி வைத்தார்.

தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டார் மணிரத்னம். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. 'தோழா' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, 'காஷ்மோரா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். இப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

'ப்ரேமம்' படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் கொடைக்கானலில் இருக்கிறார் மணிரத்னம்.

இப்படத்தில் 7 பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் உருவாக்கம் பணி தொடங்க இருக்கிறது.

'ஓ காதல் கண்மணி' படத்தைப் போல இப்படத்தையும் ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். கார்த்தி, சாய் பல்லவி உடன் நடிக்க மற்ற பாத்திரங்களின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x