Published : 30 Aug 2021 06:07 PM
Last Updated : 30 Aug 2021 06:07 PM

சுபாஷ்கரன் - ஷங்கர் சந்திப்பு: முடிவுக்கு வந்தது 'இந்தியன் 2' சர்ச்சை

சுபாஷ்கரன், ஷங்கர் இருவரும் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, 'இந்தியன் 2' படத்தின் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் மோதல் உருவானது.

தற்போது தெலுங்கில் ராம்சரண் இயக்கத்தில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். அவருக்கு எதிராக சென்னை மற்றும் ஹைதராபாத் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது லைகா நிறுவனம். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிற படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்தப் பிரச்சினைகளால் மீண்டும் 'இந்தியன் 2' திரைப்படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது 'இந்தியன் 2' படத்தின் சர்ச்சைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன. லைகா நிறுவனர் சுபாஷ்கரன் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தார். அப்போது சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.

'இந்தியன் 2' பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க சுபாஷ்கரன் - ஷங்கர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இருவருமே மனம்விட்டுப் பேசினார்கள். விரைவில் ஷங்கர் மீது தொடுத்த அனைத்து வழக்குகளையும் லைகா நிறுவனம் வாபஸ் பெறவுள்ளது.

மேலும், ராம்சரண் படத்தை முடித்துவிட்டு 'இந்தியன் 2' படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதற்குள் கமலும் 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்துவிடுவார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x