Published : 16 Aug 2021 11:08 AM
Last Updated : 16 Aug 2021 11:08 AM

செப்டம்பரில் 'ஆர்டிகிள் 15' ரீமேக் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு மீண்டும் செப்டம்பரில் தொடங்கவுள்ளது.

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது.

அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே உள்ளது. தற்போது செப்டம்பரில் முழுவீச்சில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இந்தக் கூட்டத்தொடர் செப்டம்பர் முதல் வாரத்தில் முடிவடையவுள்ளது.

அதற்குப் பிறகு 'ஆர்டிகிள் 15' ரீமேக்கில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் எனத் திட்டமிட்டுள்ளனர். இதில் தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார்கள்.

'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கினை முடித்துவிட்டுத்தான், 'கண்ணை நம்பாதே' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x