Published : 21 Jul 2021 05:54 PM
Last Updated : 21 Jul 2021 05:54 PM

'பாட்டு'க்கு முன்பாக மற்றொரு படம்: அல்போன்ஸ் புத்திரன் திட்டம்

'பாட்டு' படத்துக்கு முன்பாக மற்றொரு படத்தை இயக்க அல்போன்ஸ் புத்திரன் திட்டமிட்டுள்ளார்.

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அடுத்த படத்தைச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் அல்போன்ஸ் புத்திரன். யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தை எழுதி, இயக்குவது மட்டுமன்றி எடிட்டிங் மற்றும் இசையமைக்கும் பொறுப்புகளையும் சேர்த்து கவனிக்கவுள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் அறிவித்தார். இந்தப் படத்தின் பணிகள் கரோனா அச்சுறுத்தலால் தாமதமாகின.

இதற்கு முன்பாக ஒப்புக்கொண்ட படங்களின் பணிகள் இருப்பதால், 'பாட்டு' படத்துக்கு நடிகர்களின் தேதிகள் பெறுவது கடினமாக இருந்துள்ளது. இதனால் 'பாட்டு' படத்துக்கு முன்பாக மற்றொரு படத்தை இயக்கவுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பிருத்விராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். விரைவில் தேதிகள் முடிவாகி அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. குறுகிய காலத் தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இதனை முடித்துவிட்டு மீண்டும் 'பாட்டு' படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x