Published : 18 May 2021 04:35 PM
Last Updated : 18 May 2021 04:35 PM

தமிழில் இப்போதைக்கு நடிக்கவில்லை: நடிகை கீர்த்தி ஷெட்டி ட்வீட்

இப்போதைக்கு மூன்று தெலுங்குப் படங்களில் மட்டுமே தான் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், மற்ற செய்திகள் பொய்யானவை என்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'உப்பெனா'. புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றியால் நாயகி கீர்த்தி ஷெட்டிக்குத் தொடர் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ஒரு படம், நானி நடிக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மற்றும் சுதீர் பாபு நடிக்கும் தலைப்பிடப்படாத ஒரு படம் என மூன்று படங்களில் கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே, பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வர ஆரம்பித்தன. ஆனால், இதுகுறித்துப் படக்குழுவோ, கீர்த்தி தரப்போ எந்தத் தெளிவும் தரவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி ஷெட்டி பதிவிட்டுள்ளார். அதில், "எனது அடுத்த படங்கள் குறித்து நிறைய புரளிகளைக் கேள்விப்படுகிறேன். நானி, சுதிர் பாபு, ராம் என இப்போதைக்கு மொத்தமாக 3 படங்களில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் படங்களை முடிப்பதே இப்போது நான் கவனம் செலுத்த விரும்பும் ஒரே விஷயம்.

எனது அடுத்தடுத்த படங்களைக் கையெழுத்திடும்போது நானே உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிவிக்கிறேன். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பார்த்துக் கொள்ளுங்கள். இது கடுமையான காலகட்டம், வலிமையாக இருக்க முயலுங்கள். பாதுகாப்பாக இருங்கள்" என்று கீர்த்தி ஷெட்டி ட்வீட் செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x