Published : 19 Dec 2015 12:54 PM
Last Updated : 19 Dec 2015 12:54 PM
'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கருத்து கேளுங்கள் என்று கங்கை அமரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியிருப்பதாக கூறப்படும் 'பீப்' பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பல்வேறு அமைப்புகள் சிம்பு வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் வரிகள் இருப்பதாக கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை, தஞ்சாவூர், விருதுநகர் உட்பட தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடல் குறித்து இளையராஜாவிடம் கருத்துக் கேட்டு, அவருடைய பதிலும் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
இந்நிலையில் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் 'பீப்' பாடல் குறித்து ரஜினியிடம் கேட்குமாறு காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய ஃபேஸ்புக் பதிவில், "இளையராஜா போன்ற இசைப் பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துக்கள் கேட்பது என்ற வரம்பு வேண்டும்.
அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை. இந்த பசங்க போட்ட பாடல் பற்றி அவர்கிட்ட கேட்டது எனக்கு பிடிக்கவில்லை. ஏன் ரஜனி சாரோட சொந்தக்காரப் பையன் தானே அனிருத். அவரிடம் கேளுங்கள்.
ஏன் தமிழ் தமிழ்னு உசுர விடுகிறாராரே சிம்புவின் அப்பா டி ஆர். அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்கள். என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே, உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT