Last Updated : 21 Mar, 2021 04:42 PM

 

Published : 21 Mar 2021 04:42 PM
Last Updated : 21 Mar 2021 04:42 PM

கிண்டல் செய்பவர்களைப் பற்றிக் கவலையில்லை: சோனாக்‌ஷி சின்ஹா

தன்னைப் பற்றிய கிண்டல்கள் ஒரு காலத்தில் தன்னை பாதித்ததாகவும் தற்போது அவற்றைப் பெரிதாக கவனிப்பதில்லை என்றும் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா கூறியுள்ளார்.

"சமூக ஊடகத்தில் என்னைப் பற்றிக் கிண்டலடிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து ஒரு காலத்தில் நான் அதிகம் கவலைப்படுவேன். அதற்கு எதிர்வினையும் தருவேன். ஆனால், இப்போது அவை எதுவும் என்னை பாதிக்காத நிலையில் இருக்கிறேன். அதைக் கடந்துவரக் கற்றுக் கொண்டேன்.

இப்படிக் கிண்டல் செய்பவர்கள் அவர்களின் மொபைல்களின் பின்னால் உட்கார்ந்துகொண்டு எனக்கு முக்கியமே இல்லாத எதிர்மறை எண்ணங்களை உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனது ரசிகர்கள் எப்போதும் எனக்கு முழு ஆதரவைத் தந்திருக்கின்றனர். அதுதான் முக்கியம். சமூக ஊடகங்களில் என்றுமே நான் நானாகவே இருந்திருக்கிறேன். அப்படியே அசலாகத் தொடர்ந்து இருப்பேன்" என்று சோனாக்‌ஷி பேசியுள்ளார்.

படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்துப் பேசுகையில், "எல்லோருமே எது தேவையோ அதை ஏற்றுக் கொள்கிறோம். எச்சரிக்கையுடன் இருப்பதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதும் நமது பொறுப்பு. அதுவும் பலருடன் சேர்ந்து பணியாற்றும்போது. அந்தந்தப் படக்குழு, அவர்களின் குடும்பத்தினருக்காக ஒவ்வொருவரும் பொறுப்பாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

"எனக்கு மகிழ்ச்சியைத் தரும் சிறந்த வேலையை நான் தொடர்ந்து செய்ய வேண்டும். அது ஓடிடியோ, திரையரங்கோ, கதை எனக்குப் பிடிக்க வேண்டும். இப்போது அமேசான் ப்ரைமுக்காக ஒரு நிகழ்ச்சியை முடித்திருக்கிறேன். 'பூஜ் தி ப்ரைட் ஆஃப் இந்தியா' படம் வெளியாகவுள்ளது" என்று சோனாக்‌ஷி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x