Published : 11 Mar 2021 11:01 PM
Last Updated : 11 Mar 2021 11:01 PM

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சென்னை

முன்னணி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லாபம்'. இந்தப் படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். இன்று (மார்ச் 11) மதியம் எடிட்டிங் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் எடிட்டிங் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதித்து வருகிறார்கள். அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

புரட்சிகரமான கருத்துகளை தன் படங்கள் மூலமாகக் கூறுபவர் இயக்குநர் ஜனநாதன். இவருடைய இயக்கத்தில் 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியீட்டுக்கு 'லாபம்' தயாராகி வருகிறது. இந்தப் படங்கள் போக தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கல்யாண் இயக்கத்தில் வெளியான 'பூலோகம்' படத்துக்கு வசனங்கள் எழுதியவர் எஸ்.பி.ஜனநாதன் என்பது நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x