Published : 22 Nov 2015 04:29 PM
Last Updated : 22 Nov 2015 04:29 PM
தமிழ் மொழிக்காக நான் செய்கிற படம் 'தமிழன் என்று சொல்' என்று படப்பூஜை விழாவில் விஜயகாந்த் தெரிவித்தார்.
அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'தமிழன் என்று சொல்'. ஹிப் ஹாப் தமிழா இசையமைக்க இருக்கும் இப்படத்தை வரதராஜன் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
படப்பூஜையில் விஜயகாந்த் பேசியது, "படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். 'தமிழன் என்று சொல்' படத்தின் கதையைக் கேட்டேன். மனைவியும், பெரிய பையனும் இக்கதையைக் கேட்டுவிட்டு, இப்படத்தில் நடிங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். உடனே தான் இயக்குநரை அழைத்து கதையைக் கேட்டேன். சண்முக பாண்டியன் நடிக்கிறான் என்பதைத் தாண்டி, மொழிப் படம் என்பதால் ஒப்புக் கொண்டேன்.
இயக்குநர் சொன்ன கதையில் ஒரு வெறி இருந்தது. உடனே நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டேன். மனைவியும், பெரிய மகனும் கதை எப்படி இருக்கிறது என்று கேட்டார்கள். நானே மக்கள் பணி என்று போய்க் கொண்டிருக்கிறேன்டா என்று சொன்னவுடன், "நீங்க நடிக்கிறீங்க" என்று பெரிய பையன் சொல்லிவிட்டான். மகன் சொல்லிவிட்டான், மொழிப் படம் வேறு உடனே இயக்குநரிடம் "ஏன்பா.. தமிழ்நாட்டில் வேறு நடிகர்களே இல்லயா" எனக் கேட்டேன். இயக்குநரும் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்றவுடனே, கண்டிப்பாக பண்றேன் என்று தெரிவித்துவிட்டேன். படத்தின் தயாரிப்பாளர் புதியவர் எல்லாம் இல்லை, எனக்கு 30 ஆண்டு காலமாக அவரைத் தெரியும்.
விஜயகாந்த் ஏதோ கத்தி எல்லாம் வைத்திருக்கிறார் என்று நினைத்துவிடாதீர்கள். நிச்சயமாக சொல்வேன், இப்படம் ஒரு மாறுபட்ட படம். தமிழ் மொழிக்காக நான் செய்கிற படம் 'தமிழன் என்று சொல்'" என்று பேசினார் விஜயகாந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT