Published : 29 Dec 2020 12:17 PM
Last Updated : 29 Dec 2020 12:17 PM

உடல்நலப் பிரச்சினைகள்; அரசியல் வருகை இல்லை - ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு ரஜினி அறிக்கை

சென்னை

உடல்ரீதியான காரணங்களை முன்வைத்து, அரசியலுக்கு வர முடியாததிற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது வழக்கமான பரிசோதனையில் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ரஜினிக்கு கரோனா நெகடிவ் என்றாலும், ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த மாறுதல் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் பயப்படும்படி எதுவும் இல்லை என்பதால், சென்னை திரும்பினார். ஆனாலு, மருத்துவர்கள் ரஜினிக்கு சில விஷயங்களை அறிவுறுத்தினார்கள்.

இதனால், ரஜினி அரசியலுக்கு வருவாரா உள்ளிட்ட சந்தேகம் வலுத்தது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்‌, ஜனவரியில்‌ கட்சி தொடங்குவேன்‌ என்று அறிவித்து மருத்துவர்களின்‌ அறிவுரையையும்‌ மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில்‌ கலந்து கொள்ள ஹைதராபாத்‌ சென்றேன்‌. கிட்டத்தட்ட 120 பேர்‌ கொண்ட படக்‌ குழுவினருக்கு தினமும்‌ கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும்‌ தனிமைப்படுத்தி, முகக்‌ கவசம்‌ அணிவித்து, மிகவும்‌ ஜாக்கிரதையாகப் படப்பிடிப்பை நடத்தி வந்தோம்‌.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும்‌ 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர்‌ படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும்‌ கரோனா பரிசோதனை செய்வித்தார்‌. எனக்கு கரோனா நெகடிவ்‌ வந்தது. ஆனால்‌ எனக்கு இரத்தக்‌ கொதிப்பில்‌ அதிக ஏற்றத்‌ தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக்‌ கொண்டும்‌ எனக்கு ரத்தக்‌ கொதிப்பில்‌ தொடர்ந்து ஏற்றத்‌ தாழ்வு இருக்கக்‌ கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தைக் கடுமையாகப் பாதிக்கும்‌. ஆகையால்‌ என்னுடைய மருத்துவர்களின்‌ அறிவுரைப்படி அவர்களின்‌ மேற்பார்வையில்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேரிட்டது.

என்‌ உடல்நிலை ௧ருதி தயாரிப்பாளர்‌ கலாநிதி மாறன்‌ அவர்கள்‌ மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார்‌. இதனால்‌ பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய்‌ நஷ்டம்‌. இவை அனைத்துக்கும்‌ காரணம்‌ என்னுடைய உடல்‌ நிலை. இதை ஆண்டவன்‌ எனக்குக் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான்‌ பார்க்கிறேன்‌.

நான்‌ கட்சி‌ ஆரம்பித்த பிறகு ஊடகங்கள்‌, சமூக வலைத்தளங்கள்‌ மூலமாக மட்டும்‌ பிரச்சாரம்‌ செய்தால்‌ மக்கள்‌ மத்தியில்‌ நான்‌ நினைக்கும்‌ அரசியல்‌ எழுச்சியை உண்டாக்கித்‌ தேர்தலில்‌ பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல்‌ அனுபவம்‌ வாய்ந்த யாரும்‌ மறுக்கமாட்டார்கள்‌.

நான்‌ மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கான ஏன்‌ லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்‌. 120 பேர்‌ கொண்ட குழுவிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டு நான்‌ மூன்று நாட்கள்‌ மருத்துவமனையில்‌ மருத்துவர்களின்‌ கண்காணிப்பில்‌ இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கரோனா உருமாறி புது வடிவம்‌ பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய்‌ எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும்‌ Immuno Suppressant மருந்துகளைச் சாப்பிடும்‌ நான்‌, இந்த கரோனா காலத்தில்‌ மக்களைச் சந்தித்து, பிரச்சாரத்தின்‌ போது என்‌ உடல்நிலையில்‌ பாதிப்பு ஏற்பட்டால்‌ என்னை நம்பி என்கூட வந்து என்னுடன்‌ அரசியல்‌ பயணம்‌ மேற்கொண்டவர்கள்‌ பல சிக்கல்களையும்‌ சங்கடங்களையும்‌ எதிர்கொண்டு, மனரீதியாகவும்‌ பொருளாதார ரீதியாகவும்‌ பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்‌.

என்‌ உயிர்‌ போனாலும்‌ பரவாயில்லை, நான்‌ கொடுத்த வாக்கை தவற மாட்டேன்‌, நான்‌ அரசியலுக்கு வருவேன்‌ என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால்‌ நாலு பேர்‌ நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள்‌ என்பதற்காக என்னை நம்பி என்‌ கூட வருபவர்களை நான்‌ பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால்‌ நான்‌ கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதை அறிவிக்கும்‌ போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்‌ தான்‌ தெரியும்‌.

இந்த முடிவு ரஜினி மக்கள்‌ மன்றத்தினருக்கும்‌, நான்‌ கட்‌சி ஆரம்பிப்பேன்‌ என்று எதிர்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கும்‌ ரசிகர்களுக்கும்‌, மக்களுக்கும்‌ ஏமாற்றத்தை அளிக்கும்‌, என்னை மன்னியுங்கள்‌.

மக்கள்‌ மன்றத்தினர்‌ கடந்த மூன்று ஆண்டுகளாக என்‌ சொல்லுக்குக்‌ கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும்‌, நேர்மையுடனும்‌ கரோனா காலத்திலும்‌ தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்‌திருக்கின்றீர்கள், அது வீண்‌ போகாது. அந்த புண்ணியம்‌ என்றும்‌ உங்களையும்‌ உங்கள்‌ குடும்பத்தையும்‌ காப்பாற்றும்‌.

கடந்த நவம்பர்‌ 30 - ம்‌ தேதி நான்‌ உங்களைச் சந்தித்த போது, நீங்கள்‌ எல்லோரும்‌ ஒரு மனதாக 'உங்கள்‌ உடல்‌ நலம்‌ தான்‌ எங்களுக்கு முக்கியம்‌, நீங்கள்‌ என்ன முடிவெடுத்தாலும்‌ எங்களுக்குச் சம்மதமே' என்று சொன்ன வார்த்தைகளை என்‌ வாழ்நாளில்‌ மறக்கமாட்டேன்‌. நீங்கள்‌ என்மேல்‌ வைத்திருக்கும்‌ அன்பிற்கும்‌, பாசத்திற்கும்‌ தலை வணங்குகிறேன்‌. ரஜினி மக்கள்‌ மன்றம்‌ என்றும்‌ போலச் செயல்படும்‌.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள்‌ வந்தாலும்‌ தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில்‌ உங்க உடல்‌ நலத்தை கவனியுங்க, அதுதான்‌ எங்களுக்கு முக்‌கியம்‌ என்று அன்புடன்‌ கூறிய தமிழருவி மணியன்‌ ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்‌.

நான்‌ கேட்டுக்‌ கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில்‌ பொறுப்பான பதவியிலிருந்து விலகி என்‌ கூட வந்து பணியாற்றச் சம்மதித்த அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும்‌ நன்றி கூற நான்‌ கடமைப்பட்டுள்ளேன்‌.

தேர்தல்‌ அரசியலுக்கு வராமல்‌ மக்களுக்கு என்னால்‌ என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான்‌ செய்வேன்‌. நான்‌ உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும்‌, வெளிப்படைத் தன்மையையும்‌ விரும்பும்‌, என்‌ நலத்தில்‌ அக்கறையுள்ள, என்மேல்‌ அன்பு கொண்ட என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான ரசிகர்களும்‌, தமிழக மக்களும்‌ என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்‌ என்று அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்.‌"

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x