Last Updated : 25 Oct, 2015 04:23 PM

 

Published : 25 Oct 2015 04:23 PM
Last Updated : 25 Oct 2015 04:23 PM

நடிகர் சங்கத்தின் அறங்காவலர் ஆகிறார் கமல்: நிர்வாகிகள் தகவல்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான 'பாண்டவர் அணி' வெற்றி பெற்றது. நாசர் தலைமையிலான அணியின் முதல் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்தித்தார்கள். அச்சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இச்சந்திப்பில் நடிகர் சங்கத்தின் அறங்காவலரில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்திருப்பதாக விஷால் தெரிவித்தார். மேலும், இனிமேல் 'பாண்டவர் அணி' என்று தங்களைக் குறிப்பிட வேண்டாம் என்றும், நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இச்சந்திப்பில் துணைத் தலைவர் பொன்வண்ணன் பேசியது, "சரத்குமார் சார் SPIC சினிமாஸ் மூலம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். அது இன்னும் எங்கள் நிர்வாகத்துக்கு வந்து சேரவில்லை. இன்னும் 2 நாட்களில் அது தொடர்பான விஷயங்கள் எங்களை வந்து சேரும். அதைப் படித்து, ஆராய்ந்து நிர்வாகம் முடிவு எடுக்கும்.

எங்களது 41 தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். அந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவது தான் எங்கள் கடமை. ரஜினி சார் மட்டுமன்றி பல நண்பர்கள் 'தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்' என பெயர் மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் சங்கம் ஆரம்பிப்பதில் எந்த ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், பெயர் மாற்றத்துக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்கிறது. சட்டரீதியாக அது முடியும் எனில் அந்த தமிழ் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்துவோம்" என்று தெரிவித்தார்.

மேலும், நடிகர் சூர்யா தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்கொடையாக 10 லட்ச ரூபாய் அளித்திருக்கிறார்.

நடிகர் சங்கத்தின் தற்போதைய இருப்பு

கணக்கில் நிதியாக : 21,37,017

நிரந்திர வைப்பு நிதி: 87,75,000

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x