Published : 09 Dec 2020 04:21 PM
Last Updated : 09 Dec 2020 04:21 PM

என்னவோ தவறாக இருக்கிறது: சித்ரா தற்கொலை குறித்து வனிதா விஜயகுமார் சந்தேகம்

சென்னை

என்னவோ தவறாக இருக்கிறது. எனக்குச் சரியெனத் தோன்றவில்லை என்று சித்ரா தற்கொலை குறித்து வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், பலரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை என்றே அழைத்து வந்தனர். இவருக்கென்று சமூக வலைதளத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

இன்று (டிசம்பர் 9) அதிகாலை சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சித்ரா தற்கொலை குறித்து வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்த வருடம் நான் கேட்ட மிக அதிர்ச்சிகரமான செய்தி இதுதான். சித்ரா, என்ன ஆனது? கடந்த வாரம்தான் அவர் விருந்தினராகப் பங்கேற்ற 'கலக்கப் போவது யாரு' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தேன். மிகவும் உற்சாகமான, துணிச்சலான, அழகான, மகிழ்ச்சியான பெண். அவர் ரேஷ்மாவை ஞாபகப்படுத்துவதாக அவரிடம் சொன்னேன்.

தற்கொலை ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னவோ சந்தேகமாக இருக்கிறது. நேற்றிரவு ஸ்டார் மியூஸிக் நிகழ்ச்சிப் படப்பிடிப்பில் இருந்தார். பக்கத்தில் இருந்த 'கலக்கப் போவது யாரு' அரங்கில் அதே நேரத்தில் நானும் படப்பிடிப்பில் இருந்தேன். இருவரும் இரவு 2.30 மணியளவில் ஒரே நேரத்தில் கிளம்பினோம். அவர் தனது ஓட்டல் அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டாரா?

என்னவோ தவறாக இருக்கிறது, எனக்குச் சரியெனத் தோன்றவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் கண்முன்னே அவ்வளவு உயிர்ப்புடன் இருந்தார்".

இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x