Published : 06 Oct 2015 11:35 AM
Last Updated : 06 Oct 2015 11:35 AM
சாலை விபத்தில் பலியான தனது ரசிகர்களின் குடும்பத்தினருக்கு விஜய் நிதி உதவி அளித்து, நேரில் ஆறுதல் கூறினார்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபுதமீன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியானது.
விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும், தற்போது வரை வசூல் குறையவில்லை என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், 'புலி' வெளியான அன்று தாம்பரம் அருகே மணிமங்கலத்தைச் சேர்த்த விஜய் ரசிகர்கள் சவுந்தராஜன் மற்றும் உதயகுமார் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மோதி சம்பவ இடத்திலே பலியானார்கள்.
இச்செய்தி விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகவும் கவலையுற்ற விஜய், இன்று காலை 6 மணியளவில் இருவரது வீட்டிற்கும் சென்று அவர்களது பெற்றோரிடம் ஆறுதல் கூறி நேரில் உதவி வழங்கினார்.
மேலும், 'உங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவி வேண்டும் என்றால் தயங்காமால் கேளுங்கள், கண்டிப்பாக உதவ நான் கடமைப்பட்டிருக்கிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளார். விஜய்யின் இந்தச் செயல், அவருடைய ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT