Last Updated : 03 Nov, 2020 11:13 AM

 

Published : 03 Nov 2020 11:13 AM
Last Updated : 03 Nov 2020 11:13 AM

'பாபா கா தாபா' விவகாரம்: நடிகர் மாதவன் கடும் கண்டனம்

யூடியூப்பில் ஒரு சேனலை நடத்தி வருபவர் டெல்லியைச் சேர்ந்த கவுரவ் வாசன். கடந்த மாதத் தொடக்கத்தில், டெல்லி மால்வியா நகரில் இயங்கி வரும் பாபா கா தாபா என்ற உணவகத்தையும், அதை நடத்தி வரும் காந்தா பிரசாத் தம்பதி குறித்தும் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் கவுரவ்.

அந்த வீடியோவில், காந்தா பிரசாத் நடத்தி வரும் சிறிய ஓட்டலில் கரோனா பிரச்சினை காரணமாக யாரும் சாப்பிட வராததால் வருமானமின்றி அவர் தவிப்பதாகவும், அவர் அழுது தவிக்கும் காட்சிகளும் இருந்தன. அந்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அந்த காந்தா பிரசாத் ஓட்டலில் அடுத்த சில நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டுச் சென்று சாப்பிட்டனர். மேலும் பொதுமக்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவி அளித்தனா்.

இந்நிலையில், பொதுமக்களிடம் இருந்து தங்களுக்கு வந்த லட்சக்கணக்கான நிதியுதவியை, கவுரவ் வாசனும் அவரது மனைவியும் முறைகேடு செய்து ஏமாற்றி தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், காந்தா பிரசாத் சார்பில், டெல்லி தெற்கு மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''டெல்லியைச் சேர்ந்த பாபா கா தாபா உணவகத்தில் வயதான உரிமையாளர் ஏமாற்றப்படிருக்கிறார். இது போன்ற சம்பவங்களால் தான் மக்கள் நல்லது செய்ய முன்வர மறுக்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர்களை ஏமாற்றிய அந்த மோசடிக்கார ஜோடி (யூடியூப் சேனல் நடத்தும் கவுரவ் தம்பதி) கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும். டெல்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது''.

இவ்வாறு மாதவன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x