Last Updated : 26 Sep, 2020 11:16 AM

 

Published : 26 Sep 2020 11:16 AM
Last Updated : 26 Sep 2020 11:16 AM

என் வாழ்வின் ஒரு அங்கம் எஸ்பிபி: கமல்ஹாசன் நெகிழ்ச்சி

பாடகர் எஸ்பிபி குறித்த பல்வேறு நினைவுகளை நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் நேற்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று மாலை ஆன்லைன் வழியாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நாங்கள் எப்போது முதலில் சந்தித்தோம் என்பதை மறக்கும் அளவுக்கு எங்களுக்கு இடையிலான பிணைப்பு அதிகமாகிவிட்டது. அவர் என் வாழ்வின் ஒரு அங்கம். என் முதல் காதல், மென்சோகம் என அனைத்திலும் அவர் ஒரு அங்கமாக இருந்துள்ளார்.

அவரது குரல் இந்தியா முழுவதுக்குமானது. அவரை நாம் தமிழ் மொழியில் மட்டும் சுருக்கிவிட முடியாது. முஹம்மது ரஃபி மற்றும் கிஷோர் குமாரின் மிகப்பெரிய ரசிகர் எஸ்பிபி. இளம் தலைமுறையினர், கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எஸ்பிபி அதைத்தான் செய்தார்.

அவர் அடுத்தவர்களின் திறமைகளை அங்கீகரிக்கக் கூடியவர். யாரைப் பற்றியும் தவறாகப் பேசமாட்டார். அப்படி மற்றவர்கள் பேசினால் கூட ‘ம்ம்ம்’ என்று சொல்லி பேச்சை மாற்றி விடுவார். திறமையாளர்களை அவர் கொண்டாடத் தவறியதே இல்லை. அவருடைய பணிவு என்றென்றும் நினைவுகூரப்படும்.

நாங்கள் மக்களால் இணைந்தோம். அவர்களே எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் நாங்கள் சகோதரர்களானோம்''.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x