Published : 18 Sep 2020 01:10 PM
Last Updated : 18 Sep 2020 01:10 PM

‘நான் ஒரு போராளி'- கங்கணா; அப்படியென்றால் சீனாவை வீழ்த்திவிட்டு வாருங்கள்- அனுராக் காஷ்யப்: ட்விட்டரில் வெடித்த கருத்து மோதல் 

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டில் நிலவி வரும் மாபியா விவகாரம், போதைப் பொருள் விவகாரம் குறித்து நடிகை கங்கணா வெளிப்படையாகப் பேசியிருந்தார். தொடர்ந்து மும்பையை மினி பாகிஸ்தான் என்று விமர்சித்த விவகாரத்தில் சிவசேனா - கங்கணா ரணாவத் இடையே சச்சரவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து மும்பை பாந்த்ராவில் உள்ள கங்கணா அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளன என்று கூறி இடிக்கப்பட்டது. மும்பை மாநகராட்சியின் இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில், கங்கணாவின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர், ஜெயா பச்சன், ஊர்மிளா உள்ளிட்டோரின் விமர்சனக்களுக்கு கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் - கங்கணா இடையே மோதல் உருவாகியுள்ளது.

நேற்று (18.09.20) கங்கணா தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் ஒரு போராளி. என்னுடைய சிரத்தைக் கொய்வேனே தவிர யாருக்கும் சிரம்பணிய மாட்டேன். தேசத்தின் கவுரவத்துக்காக எப்போதும் குரல் கொடுப்பேன். மரியாதையோடும், சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் தேசியவாதி என்ற பெருமிதத்தோடும் வாழ்கிறேன். என்னுடைய கொள்கைகளில் எப்போதும் சமரசம் செய்யமாட்டேன். ஜெய்ஹிந்த்!'' என்று பதிவிட்டார்.

கங்கணாவின் இந்தப் பதிவைப் பகிர்ந்த அனுராக் காஷ்யப், ''நீங்கள்தான் ஒரே மணிகர்னிகா. நீங்கள் உங்களோடு நான்கைந்து பேரை சேர்த்துக் கொண்டு போய் சீனாவை வீழ்த்திவிட்டு வாருங்கள். அவர்கள் நம் நாட்டில் எப்படி ஊடுருவியுள்ளார்கள் என்று பாருங்கள். நீங்கள் இங்கு இருக்கும் வரை நம் நாட்டை யாரும் தொடமுடியாது என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். உங்கள் வீட்டிலிருந்து எல்லைக்கு ஒரு நாள் பயணம்தான். செல்லுங்கள் பெண் சிங்கமே. ஜெய் ஹிந்த்'' என்று கிண்டல் தொனியில் பதிவிட்டிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கங்கணா, ''சரி, நான் எல்லைக்குச் செல்கிறேன். நீங்கள் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லுங்கள். நாட்டுக்குத் தங்கப்பதக்கங்கள் தேவை. ஒரு நடிகை என்ன வேண்டுமானாலும் செய்ய இது ஒன்றும் பி கிரேட் திரைப்படம் அல்ல. நீங்கள் உருவகப்படுத்திப் பேசத் தொடங்கிவிட்டீர்கள். எப்போதிலிருந்து நீங்கள் இவ்வளவு முட்டாள் ஆனீர்கள்? நாம் நண்பர்களாக இருந்தபோது நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தீர்களே?'' என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு அனுராக், ''உங்கள் வாழ்க்கைதான் உருவகமாக மாறிவிட்டது சகோதரி. இப்போது வரை அனைத்துமே உருவகமாகி விட்டது. உங்கள் நடவடிக்கைகள் அனைத்துமே உருவகமாகிவிட்டது. ட்விட்டரில் பல உருவகங்களை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள். வேலைவாய்ப்பின்மையை உருவாக்கியவர்தான் உங்கள் வசனகர்த்தா என்று மக்கள் பேசத்தொடங்கி விட்டனர். நீங்கள் எப்படி உருவகப்படுத்துவீர்கள் என்பது அனைவரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும்'' என்றார்.

இந்தக் கருத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கங்கணா இறுதியாகத் தான் பகிர்ந்த பதிவில், ''நீங்கள் சங்கடமான நிலையில் இருப்பதை நான் காண்கிறேன். இதில் எந்த அர்த்தமும் இல்லை. இதை இன்னும் மோசமாக்க விரும்பவில்லை. நான் பின்வாங்கிக் கொள்கிறேன். தயவுசெய்து மோசமாக உணரவேண்டாம். மஞ்சள் கலந்த பாலைக் குடித்துவிட்டுத் தூங்கச் செல்லவும். நாளை புதிய நாளாக அமையட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x