Published : 13 Sep 2020 04:21 PM
Last Updated : 13 Sep 2020 04:21 PM

தயாரிப்பு நிறுவனங்களுக்கு விஜய் தேவரகொண்டா தரப்பு எச்சரிக்கை

விஜய் தேவரகொண்டா பெயரில் போலியாக நடிகர்கள் தேர்வு செய்யும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அவரது தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்துக்குப் பிறகு பூரி ஜெகந்நாத் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே நாயகியாக நடித்து வரும் இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா வேறு எந்தவொரு படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. இதனிடையே, சில தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் தயாரிக்கவுள்ளோம் என்று நடிகர்கள் தேர்வு நடத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விஜய் தேவரகொண்டா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"விஜய் தேவரகொண்டா குழுவினரான நாங்கள் சில தயாரிப்பு நிறுவனங்கள் விஜய் தேவரகொண்டாவை வைத்துப் படமெடுப்பதாகவும், நடிகர் நடிகையர்களுக்கான ஆடிசன் நடைபெறுவதாகவும் பொய்யான தகவல்களை வெளியிடுவதைக் கவனித்தோம்.

விஜய் தேவரகொண்டா தொடர்பான எந்தவொரு படத்தை பற்றிய அறிவிப்பை அவரோ அல்லது தயாரிப்பாளர்களோ வெளியிடுவார்கள். விஜய் தேவரகொண்டாவின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் உறுதி செய்யப்படும்.

இது போன்ற மோசடிக்காரர்களின் மேல் நாங்கள் நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில் அனைவரும் கவனமாகவும், வரும் தகவல்களை ஒன்றுக்கு இரண்டு முறை உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்"

இவ்வாறு விஜய் தேவரகொண்டா தரப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x