Published : 09 Jun 2020 10:37 PM
Last Updated : 09 Jun 2020 10:37 PM

கைவிடப்பட்ட படத்தை மீண்டும் தொடங்க தனுஷ் திட்டம்

தனது இயக்கத்தில் தொடங்கி, கைவிடப்பட்ட சரித்திர படத்தை மீண்டும் தொடங்க தனுஷ் திட்டமிட்டுள்ளார்.

’பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார் தனுஷ். ராஜ்கிரண், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனுஷே தயாரித்திருந்தார். அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பால், தனது அடுத்த இயக்கத்தை சில மாதங்களிலேயே தொடங்கினார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க தொடங்கிய அந்தப் படத்தில் நாகார்ஜூன், ஸ்ரீகாந்த், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்தப் படத்தை இயக்குவது மட்டுமன்றி நாயகனாகவும் நடித்தார். 'நான் ருத்ரன்' எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் பிரம்மாண்டமான சரித்திர கதையாகும்.

இதன் படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களிலேயே, பைனான்ஸ் பிரச்சினையால் நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா ஊரடங்கில் இந்தப் படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் மாற்றமா அல்லது அதே தயாரிப்பாளரா உள்ளிட்ட தகவல்கள் அனைத்துமே கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x