Published : 05 May 2020 10:03 PM
Last Updated : 05 May 2020 10:03 PM

விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக களமிறங்கிய தயாரிப்பாளர் சங்கம்

விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கரோனா நிவாரணத்துக்கு தெலுங்குத் திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் நிவாரண உதவி வழங்கினார்கள். ஆனால், விஜய் தேவரகொண்டா மட்டும் எந்தவொரு நிவாரணமும் அறிவிக்காமல் இருந்தார். சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் விரும்புபவர்கள் உதவலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் விஜய் தேவரகொண்டா.

உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தார். இதற்காக பலரும் நிதியுதவி அளித்ததோடு மட்டுமன்றி, உதவி தேவை என பதிவு செய்தவர்களுக்கு உதவவும் தொடங்கினார்கள். விஜய் தேவரகொண்டாவின் இந்த முயற்சியை தனியார் இணையதளம் ஒன்று கடுமையாக விமர்சித்தது. அவருடைய படங்களின் தோல்வியால் அவரிடம் பணமில்லை என்பதால் இப்படிச் செய்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டது. இதனை #KillFakeNews என்ற ஹேஷ்டேக் ஒன்றைத் தொடங்கி விஜய் தேவரகொண்டா கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்குத் திரையுலகின் முன்னணிப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் சங்கம் சிறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"திரைத்துறையின் நலனை ஆதரிக்கும் ஒரு சங்கமாக, பொய்யான செய்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற புரளிகளையும் எதிர்க்கிறோம். சில க்ளிக்குகளுக்காகவும், தன்னார்வ அமைப்புகளின், பொதுவாழ்க்கையில் இருக்கும் சிலரின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் இது போன்ற அவதூறான கட்டுரைகள், கிசுகிசு இணையதளங்களால் எழுதப்படுகிறது. பத்திரிகைதுறையில் இப்போது தேவை உண்மையை சரிபார்ப்பதும், பாரபட்சமின்றி செயல்படுவதும் தான்"

இவ்வாறு தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x