Published : 24 Apr 2020 08:35 PM
Last Updated : 24 Apr 2020 08:35 PM

ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம்: இயக்குநர் பேரரசு

ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம் என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தினசரித் தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள், நாடக நடிகர்கள் எனப் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதில் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்தார் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. இதனைத் தொடர்ந்து பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்தார்கள். இதில் ரஜினிகாந்த் 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி அளிக்கவில்லை.

தற்போது இயக்குநர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம் என ஒவ்வொரு சங்கத்துக்கும் தனித்தனியாக நிவாரணப் பொருட்களை ரஜினி அனுப்பிவைத்து வருகிறார். ஒரு நபருக்கு 10 கிலோ அரிசி மூட்டை மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

நேற்று (ஏப்ரல் 24) இயக்குநர்கள் சங்கத்துக்கு 1500 பேருக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பினார். இதற்கு ரஜினிக்கு நன்றி தெரிவித்து இயக்குநர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது.

இதனிடையே, இந்த உதவி தொடர்பாக வெளியே செய்தியாகக் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. இதை மீறிவிட்டதாக இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர் இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் பேரரசு கூறியிருப்பதாவது:

"ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம். இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மூட்டை, மளிகைப் பொருட்கள் வழங்கும் போது "பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம்" என்ற நிபந்தனையோடு தான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படிச் சொல்லாதிருப்பது!"

இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x